Monday, March 29, 2010

நாலேகால் டாலர் - வாழ்த்துரை - ரெ.கார்த்திகேசு

தமிழ்ச் சிறுகதைகள் இன்று உலகத்தின் பல இடங்களிலிருந்து எழுதப்படுகின்றன. தமிழ்ப் புத்திலக்கியம் தனது தமிழ்நாட்டுப் புராதனப் பின்புலன்களிலிருந்து விடுபட்டு, உலகப் பின்புலன்களைக் காட்ட ஆரம்பித்துள்ளது. இது தமிழ்ப் புத்திலக்கியம் உலக மயமாவதன் தொடக்கத் தருணம் என்று கூறலாம்.


புலம் பெயர்ந்த இலங்கை எழுத்தாளர்கள் இந்த விரிவாக்கத்தைத் தொடக்கி வைத்தார்கள். முத்துலிங்கம் போன்ற இலங்கைவாசிகள் எப்படித் தாங்கள் உலகவாசிகள் னார்கள் என்ற கதைகளை அழகாக வடித்து வைத்தார்கள். சுஜாதா தன் இந்திய இருப்பிடத்தை விட்டுப் புலம் பெயராமல், அமெரிக்காவுக்குப் பெயர்ந்தவர்களை எட்டி எட்டிப் பார்த்து விட்டுப் பின்புலத்தைக் கொஞ்சமாக மாற்றினார். புலம் பெயர்ந்து வாழ்ந்து, அமெரிக்க அனுபவங்களை முற்றாக உள்வாங்கி காஞ்சனா தாமோதரன் எழுதி வருகிறார். நா. கண்ணன் ஜெர்மனியில் வாழ்ந்து அந்த வாழ்க்கையின் அனுபவங்களைச் சிறுகதைகளில் பிழிந்து வைக்கிறார். அண்மையில் இரா.முருகன் கணினி மென்பொருள் துறை இந்திய இளைஞர்களிடையே ஏற்படுத்தியுள்ள மாபெரும் மாற்றங்களை வைத்து அவர்கள் இங்கிலாந்துக்கும் தாய்லந்துக்கும் அமரிக்காவுக்கும் அலையும் வாழ்க்கையை அழகான கலைப் படைப்பாக்கித் தந்துள்ளார்.


இப்போது ஜெயந்தி சங்கர்.


மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் உள்ள தமிழ் எழுத்தாளர்களாகிய நாங்கள் எங்கள் சுகமான மூலைகளுக்குள் இருந்தவாறு எங்களுக்குக் கைவந்ததை எழுதி வந்தோம். இதைப் பொதுவான தமிழ் உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை என்றாலும் எங்களுக்குள் நாங்கள் பாராட்டிச் சீராட்டி வைத்துக் கொள்வதில் குறைவில்லை. 130 ண்டுகளுக்கு முன்னால் எங்கள் முதல் தலைமுறைக் குடியேற்றக்காரர்கள் தொடக்கி வைத்த ஒரு பாரம்பரியத்தை இப்போது நாட்டின் குடிமக்களாகிய நாங்கள் தொடர்ந்து வருகின்றோம் என்ற பெருமை எங்களுக்கு இருந்தது.


ஆனால் சிங்கப்பூர் தனது பொருளாதாரத்தைக் காப்பாற்றவும் முன்னேற்றவும் தமிழ் நாட்டிலிருந்து ஒரு "இரண்டாம் குடியேற்றக்காரர்கள்" அலையை ரம்பித்து வைத்து தமிழ்நாட்டிலிருந்து ட்களைக் கொண்டுவந்ததும், அதில் ஒரு சிறுபகுதியினர் நல்ல தமிழ்ப் படைப்பாளர்களாக இருந்ததும், அவர்கள் சிங்கப்பூர் அடையாளத்துடன் எழுத ஆரம்பித்ததும் அங்குள்ள தமிழ் எழுத்தாளர்களின் நித்திரையைக் கொஞ்சம் கெடுத்திருக்கிறது. இந்த இரண்டாம் குடியேற்றக்காரர்கள் வெகுவிரைவில் அவர்கள் நாட்டுக்கு அளிக்கும் பங்குக்கு ஏற்ப நிரந்தரவாசமும் குடியுரிமையும் அளிக்கப்படுவது, அவர்களுக்கும் அசல் சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்கும் உள்ள வேறுபாடுகளையும் அழித்துவிட்டிருக்கிறது.


இதை மலேசியாவில் இருந்து நாங்கள் கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் மலேசியாவின் குடியிறக்கக் கொள்கைகளும், அதன் தீவிரப் பொருளாதாரத் தேவைக்கேற்பத் தளர்வாகி வருகின்றன. நடப்பு அனைத்துலக அரசியலில் பாரம்பரியமாக தொழிலாளர்களை அளித்து வந்த நாடுகள் பின் வாங்குவதால் தொழிலாளர்களைச் சுதந்திர உலகச் சந்தையிலிருந்து தருவிக்கலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆகவே தமிழ்நாட்டிலிருந்தும் அதிகத் தொழிலாளர்கள் இங்கு வரத் தொடங்கினால் அதில் நிச்சயம் நல்ல படைப்பாளர்கள் இருப்பார்கள். (ஏற்கனவே இருக்கிறார்கள்.) ஆகவே சிங்கப்பூருக்கு ஏற்பட்டதே எங்களுக்கும் ஏற்படும். "மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்" என்ற எங்கள் அடையாளத்தின் நிர்ணயங்களை நாங்கள் மிகவும் விரிவு படுத்த வேண்டியிருக்கும். ஏற்கனவே அந்த அடையாளத்தை மலாய் மொழியில் எழுதும் தமிழ் எழுத்தாளர்களோடு நாங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலைமை வந்திருக்கிறது.


இப்படிச் சில தயக்க உணர்வுகளோடுதான் ஜெயந்தியின் படைப்புக்களை நான் படிக்க ஆரம்பித்தேன். னால் படித்து முடித்தபோது ஜெயந்தி போன்றோரின் வரவு இந்த சிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கியத்துக்கு மிகப் பெரிய ஆதாயமே தவிர அபாயம் இல்லை என்பது தெளிவாகிற்று.


சிங்கப்பூர் இனி எழப்போகும் புதிய தமிழ்ப் படைப்பிலக்கியத்துக்கு ஒரு சோதனைக் களம் என்று சொல்லலாம். தமிழ் படைப்பிலக்கியத்தின் ஜென்மபூமி கிராமமாக இருந்து வந்தது. தி.ஜா. போன்றவர்கள் அதனை அற்புதமாகப் பயன் படுத்தினார்கள். புதுமைப் பித்தன், கல்கி, ஜெயகாந்தன் (வகைக் கலப்புக்காக இந்த வரிசை) கியோர் சென்னை, மதுரை போன்ற நகர வாழ்க்கை பற்றி எழுதினாலும் அவை தமிழ்நாட்டு கிராமவாசம் மாறாத நகர்களேயாகும்.


ஆனால் உலகப் பொருளாதாரத்தில் கிராமத்தின் இடம் குறைந்து வருகிறது. இந்தியாவிலும் கூட விரைவில் நகரங்களில் வாழுவோர் எண்ணிக்கை கிராமங்களில் வாழுவோர் எண்ணிக்கையைத் தாண்டும்.


ஜெயந்தி வாழுகின்ற சிங்கப்பூரில் கிராமங்கள் கிடையாது. "ஏழைகள்" என்ற ஒரு வகுப்பினர் கிடையாது. இந்த இரண்டு விஷயங்களும் சேர்ந்து அங்கு தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் பின்புலப் பாரம்பரியத்தைப் புரட்டிப் போட்டுவிட்டன.
ஜெயந்தி இந்தப் புதிய சவால்களை மிகச் சாதுர்யமாக எதிர் கொண்டுள்ளார். அவரின் எழுத்துக்களில் நகர நெருக்கடிகளும் மன அழுத்தங்களும் செல்வச் செழிப்புக்கிடையில் வாழ்க்கை வக்கிரமாகிவிடுவதும் மிக யதார்த்தமாக வந்துள்ளன. இனி குவால லும்பூரிலும் சென்னையிலும் டெல்லியிலும் லண்டனிலும் தமிழர் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் எழுத்துக்கள் எப்படியிருக்கும் என்பதை இவரது கதைகளை வைத்தே யூகித்துவிடலாம் போலிருக்கிறது.


இவர் கதைகளைத் தொகுத்துள்ள வரிசை முறையில் அமைந்துள்ள முதல் இரண்டு கதைகளும் முதன்மை இடம் பெறுவது பொருத்தம். "நாலேகால் டாலர்" கதையில் பேரங்காடியில் ஒரு வாழ்த்து அட்டைக்கு பணம் செலுத்த மறந்து விட்ட கதைத் தலைவி அடைகின்ற அவமானமும் மன வேதனையும், "ஈரம்" கதையில் திடீரென நின்றுவிட்ட மின்தூக்கியில் பயத்தால் மூத்திரம் பெய்துவிட்ட தமிழ்நாட்டு வீட்டுப் பணிப் பெண்ணுக்கு ஏற்படும் அதே அனுபவங்களும் நகர வாழ்க்கையில் மட்டுமே நடக்கக் கூடியன. இந்த அப்பாவிப் பெண்கள் இழைத்துவிட்ட இந்தத் தவறுகளை இப்படிப் பெரிது படுத்த ஈரம் வற்றிவிட்ட நகர ஒழுங்கு முறை அமைப்புமுறையில்தான் முடியும்.


இனி தொடர்ந்து வருகின்ற கதைகளிலும் நகரம், நமக்குப் பழகிவிட்ட வாழ்க்கை முறைகளை, உறவுகளை எப்படியில்லாம் விகாரப் படுத்திவிட்டது என்பதைத்தான் அவ்வந்த வாழ்க்கை முறைகளின் யதார்த்தம் குலையாமல் ஜெயந்தி சொல்லுகிறார்.
"பந்தயக் குதிரை" கதையில் சிங்கப்பூரில் படிக்கும் குழந்தைகளின் மன நெருக்கடிகளும், அவற்றுக்கிடையில் தமிழ் படிக்கப் படும் வேதனைகளும் கூறப்படுகின்றன. இது செய்தி; யதார்த்தம். ஆனால் அந்த யதார்த்தத்தை நுண்ணிய கற்பனையோடு நயமாக அளிக்க முடிந்திருப்பதுதான் ஜெயந்தியின் வெற்றி.
பள்ளியில் பரிட்சை நடக்கும் நேரம். போகிற வழியில் விபத்தில் அகப்பட்டுக் கொண்ட புறாவை இந்த மாணவன் பார்க்கிறான். தேர்வு பொருளாதார வாழ்க்கையின் கட்டாயத் தேவை. ஆனால் புறாவின் நிலைமை மனிதநேயத்தோடு சேர்ந்து மனதை அலைக்கழிக்கிறது. இதனை ஒரு ஓட்டப் பந்தய வேகத்தில் அவர் சொல்லுகிறார்:
"தேர்வா, புறாவா? குதிரை. தேர்வு தான், தேர்வு தான், மனம் அலறியது. ஆனால் பாவம், அதற்கென்னவானதோ? அந்தச் சிறிய பறவை உயிர் பிழைத்ததா தெரியவில்லையே. 'புறாவா தேர்வா?' - உறுமியது குதிரை. தேர்வு தான், தேர்வு தான். 'சரி பின் என்ன யோசனை, சீக்கிரம் வீட்டுக் கதவைத் திறந்து படிக்க ஆரம்பியேன். இல்லையென்றால், பத்தயத்தில் தோல்விதான் உனக்கு,..ஆமாம், நினைவிருக்கட்டும்,..ம் ,..ஓடு, ம்'. மதிப்பெண்கள் ஓடு, ம், புள்ளிகள்,..ஓட்டம், ஓட்டம், ஓட்டம், முடிவற்ற ஓட்டம்..."


"நுடம்" கதையில் ஒரு குழந்தையின் மன அழுத்தமும் அதற்குத் தாயின் கவனிப்புத் தேவையாவதையும் அம்மாவை நொண்டியாக வரையும் குழந்தை மூலமான மனோதத்துவக் கதையாக ஆக்கியுள்ளார். "திரிசங்கு" கதையில் அப்பாவும் அம்மாவும் பிரிந்து வெவ்வேறு திருமணம் செய்து கொண்ட கதையின் சிக்கலான பின்னல்கள் ஒரு சிறுபிள்ளையின் வெகுளிப் பார்வையிலிருந்து அளிக்கப்படுகின்றன.
நகரச் சூழ்நிலையிலும், அங்கு வாழ்க்கை நடத்த வேண்டிய பொருளாதாரப் போட்டி மனப்பான்மையிலும் மன ஈரம் வற்றிப்போகும் நிலைமையைத்தான் ஜெயந்தியின் பெரும்பாலான கதைகள் சொல்லுகின்றன. பொருளாதாரக் குதிரை அடிபட்டு விழும் மனிதநேயப் புறாவை மிதித்துக் கொண்டு ஓடுகிறது.


ஆனால் ஜெயந்தி தரும் செய்தி இவற்றின் அடிநாதமாக இந்தச் சூழ்நிலையிலும் மனிதநேயம் வற்றிப் போய்விடக் கூடாது என்பதுதான். பொருளாதாரத்தின் இயந்திரப் பற்களிடையே மனதின் மென்மை சிக்குண்டு விடக்கூடாது என்னும் எச்சரிக்கைகள் தெளிவாக இருக்கின்றன.


ஜெயந்தியின் கதை சொல்லும் முறை மிகச் சரளமானது. சம்பவப் பின்னல்கள் கதையோட்டத்தின் தேவைக்கேற்ப சுருக்கமாகவும் நுணுக்கமாகவும் அமைகின்றன. அவருடைய கதைகள் திறமான நெசவுகள். படிக்கப் படிக்கப் பட்டுப் போல் மனதில் வழுக்கி ஓடுகின்றன.


தமிழ்ச் சிறுகதைகள் நகர மயம் ஆகுதலும் உலக மயம் ஆகுதலும் நிகழும்போது அழுத்தமாகச் சொல்லப்பட வேண்டிய செய்திகள் எவை என்பதற்கு ஜெயந்தியின் கதைகள் முன்னுதாரணங்களாக அமைந்திருக்கின்றன.


வாழ்த்துக்கள்.

30 July 2005

No comments: