Monday, March 29, 2010

நாலேகால் டாலர் - ஒரு பார்வை - ஜே. எம். சாலி

ஒரு பார்வை



மண் வாசனையில் பிடிப்பு அதிகம் உண்டு. பிறந்து வளர்ந்த நாட்டுப் புற மண்ணும் வாழும் மண்ணும் உணர்வில் கலந்தவை. முதல் பொருள், கருப்பொருள், உரிபொருள் என்று ஆசிரியர் சொல்லிக் கொடுத்தவை அப்போது உரைக்கவில்லை. வளர வளரத் தான் உள், வெளிப் பார்வைகளை அவை விரிவுபடுத்தின. மண் வாசனைக்குள் அவை அடக்கம்.

பார்வை விஷயமும் அப்படித்தான். உணர்வுகளைப் படம் பிடிக்கவும், வார்த்தைச் சித்திரம் வடிக்கவும் வித்தியாசமான பார்வை வீச்சு வேண்டும். இரண்டு பார்வையும் சற்று விரிவாக இருந்தால் படைப்பாலியாகிவிடலாம்.

எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் சிறுகதைகளைப் படித்த போது இந்த உணர்வுகளே முகம் காட்டின.

கற்பனை இல்லாமல் கதை, கவிதைகளைப்படைக்க முடியாது என்ற வாத, விவாதங்கள் காலம் கடந்தவை. பார்ப்பதை, உணர்வதை எழுத்தால் பதிவு செய்தாலே அது படைப்பாகிவிடும். ஆக, யதார்த்தத்தின் மறுபக்கமே இலக்கியம். உள், வெளிப்பாவைகள் அல்லது உணர்வுகளின் பரிமாணமே இலக்கியத்தின் இலக்கணம். அப்படி நீங்கள் பார்க்கும் மனிதரெல்லாம் பாத்திரங்களே. மண் வாசனையை மறந்துவிடக் கூடாது. களம், தளம், பின்னணி என்பதெல்லாம் அதன் மறுபெயர்தான்.

வாசகன் பத்திரிக்கையாளன் அல்லது நடுவர் எனும் பலமுனைப் பார்வையுடன் கதை கவிதைகளைப் படிக்கும் பழக்கம் நீண்ட காலமாக உண்டு. நாற்பது ஆண்டுக்கு முந்திய சிங்கப்பூர் மக்களையும் மண் வாசனையையும், வளர்ந்த நாடான இன்றைய குடியரசின் தலைமுறை, வளங்களையும் அறிந்தவன் என்பதால் சிங்கப்பூர் பின்னணியில் எழுதப்படும் சிறுகதைகளை அக்கறையுடன் படிப்பது வழக்கம்.
ஜெயந்தி சங்கர் சிங்கப்பூர் பின்னணியில் அவ்வப்போது உள்ளூர் இதழ்களில் எழுதிய சிறுகதைகளைப் படித்து வந்திருக்கிறேன். இணைய இதழ்களிலும் அவருடைய சிறுகதைகள் இடம் பெற்று வருகின்றன.

சாங்கி விமான நிலையம், புக்கித் பாத்தோக், அங் மோ கியோ, குட்டி இந்தியா, டான் டோக் செங் மருத்துவமனை,.. போன்ற பல இடங்களைக் கதைக் களமாக்கி இருக்கிறார், ஜெயந்தி சங்கர். பல இன சமூகப் பாத்திரங்களையும் உலவவிட்டிருக்கிறார்.

மற்றொன்று கதை வடிவம். சிறுகதையின் நீளம், அளவு பற்றிய சர்ச்சை அதிகரித்துள்ள கால கட்டம் இது. இது வெகுஜன பத்திரிக்கை, சிற்றிதழ், இலக்கிய இதழ் என்ற விவாதங்களும் வெகுவாக தலையெடுத்துள்ளன. உலகளாவிய இணைய இதழ்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இரண்டு மணிநேரம் படிக்கக்கூடிய அளவில் கூட சிறுகதை இருக்கலாம். என்று ஐம்பதாண்டுகளுக்கு முன் கூறப்பட்டதை அறிவேன். இரண்டொரு பக்கங்களில் சிறுகதை இருந்தால் போதும் என்ற நிலை இன்று உருவெடுத்திருக்கிறது.

இந்த சர்ச்சைகளுக்கு அவருடைய சிறுகதைகள் விடையளிக்கின்றன.
இத்தகைய போக்குக்களுக்கு ஈடுகொடுத்து எழுதி வருகிறார் ஜெயந்தி சங்கர்.
தக்கவர்கள் இத்தொகுப்புக்கு ஆய்வுரை, முன்னுரை வழங்கியுள்ளனர். எனவே, நீளமான கருத்துரை எழுத நான் முற்படவில்லை. தமது படைப்புகளைத் தொகுத்து நூலாகக் கொணரும் அவருடைய முயற்சியை வரவேற்று வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.


அன்புடன்,
ஜே. எம். சாலி
சிங்கப்பூர்
02-08-05

No comments: