Monday, March 29, 2010

நாலேகால் டாலர் - அணிந்துரை - ஜெயபாஸ்கரன்

ஆழ்மனதின் அறச்சீற்றம்






கடந்த 2004 ஆம் ஆண்டு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவையின் (FETNA) 17ஆம் ஆண்டு தமிழர் திருவிழா மலரைச் சென்னையில் வடிவமைத்துத் தயாரிக்கும் பணியில் அதன் குழுவினரோடு ஈடு[பட்டிருந்தேன். அது ஒரு ஜூன் மாதத்தின் நள்ளிரவு. உலகின் பலநாடுகளிலிருந்தும் அம்மலருக்கும் வந்திருந்த பல்வேறு வகையான படைப்புகளை என் பணியின் நிமித்தம் படிக்கும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. படித்துப் பிழைதிருத்தம் செய்துகொண்டிருந்தேன்.

அதிகம் பேசாதவரும் ஆழ்ந்த இலக்கிய இரசனையாளருமான மலர் வடிவமைப்பாளர் தமிழேந்தி என்கிற இராசேந்திரனும், "சார், இந்த மலருக்கு 'ஈரம்'னு ஒரு கதை வந்திருக்கு சிங்கப்பூர்ல இருந்து. ஜெயந்தி சங்கர்னு ஒருத்தர் எழுதியிருக்காக. ரொம்ப நல்லா இருக்கு சார்", என்று கணிப்பொறிவேலை செய்துகொண்டே என் காதுகளுக்குத் தகவல் சொன்னார். பாறையே வெடித்து வாய்பிளக்கிறதே என்று வியந்து என் கைகளில் இந்த படைப்புகளைத் துழாவி 'ஈரம்' சிறுகதையைத் தேடிப்பிடித்துப் படித்தேன். அதற்குப்பிறகு அன்றைய பணி முடித்து அதிகாலை நான்கு மணிக்கு வழக்கம்போல் பணியிடத்திலேயே படுத்தேன். ஆனால், தூக்கம் வரவில்லை. பிழைப்புக்காக சிங்கப்பூருக்குப் போன தமிழ்நாட்டின் நடுத்தரவயதுப் பெண் ('ஈரம்' கதாநாயகி) என்னை அழ வைத்துக்கொண்டிருந்தாள். பொதுவாகத் திகிலுற்றிருப்பவனை 'பேயறைந்தது' என்பார்கள். அன்று நானும் அப்படித்தான் இருந்தேன். ஒரு சின்ன வித்தியாசம் என்னை ஒரு 'படைப்பு' அறைந்திருந்தது.

மறுநாள் இரவு மலர் தயாரிப்புப் பணிகளின்போது மற்ற படைப்புகளை வடிவமைத்துக் கொண்டே நானும் ராஜேந்திரனும் 'ஈரம்' கதைப் பற்றி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். வேறு ஏதோவொரு வேலைக்காக அதன் வாரங்கழித்து மலர் அச்சாகி வந்தவுடன் ஒட்டுமொத்த மலரைப் பற்றிப் பேசியவாறு அதன் நிறைகுறைகளைப் புரட்டிக் கொண்டிருந்தேன். வேறு ஏதோவொரு வேலைக்காக அங்கே வந்திருந்த யாரோ ஒரு நண்பர், "சாரி, மலர்ல ஈரம்னு ஒரு கதை ரொம்ப நல்லாயிருக்கு சார். ராத்திரி என் வொய்ப்கிட்ட அதைப் பத்திப் பேசிக்கிட்டிருந்தேன்", என்று சொன்னார். ஒரு படைப்பைப் பற்றி இவ்வளவு சிலாகித்தது பொதும் என்று நேற்றைய என் நினைப்பை யாரோ ஒருவர் சம்மட்டியால் அடிப்பதுபோல் அடித்துத் தகர்த்தார். அப்படியெனில் நல்ல படைப்புகள் குறித்து நாம் மௌனமாக இருந்தாலும், 'அதையறிந்தவர்கள்' மௌனமாக இருக்கமாட்டார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நான் உணர்ந்தேன். அப்போதெல்லாம் ஜெயந்தி சங்கர் என்கிறவர் சிங்கப்பூரில் இருந்து எழுதுகிறார் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். வாகனம் சீராக ஓடுகிறது என்பதைச் சொல்வதற்கு 'டிரைவிங்க்' தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லைதானே ! எனவே ஜெயந்தி சங்கருக்கு என்னைத் தெரியாத நிலையிலும் அப்போது அவரது அந்த ஒரு கதையைச் சுமந்து சென்று பலரிடம் இறக்கி வைத்துக் கொண்டிருந்தேன். அவ்வாறான ஒரு வேளையில்தான் சென்னையில் கவிஞர் மதுமிதாவிடம் தான் 'ஈரம்' கதை குறித்துச் சொன்னபோது, "அய்யோ கடவுளே, அவங்கள உங்களுக்குத் தெரியாதா? அவங்க என்னோட தோழிதாங்க!, என்று அநியாயத்துக்கு மென்மையாகவும் நிதானமாகவும் சொன்ன அவர், " ஜெயந்தி எழுதின தையல் கதையை படிச்சீங்களா" என்று கேட்டு, என் ஆர்வத்தை மேலும் தூண்டினார். அடடா அப்படியெனில்...... அவரது மற்ற கதைகளையும் நாம் படித்து விடலாம் என்று அப்போது நான் நினைத்தேன். அதன் தொடர்ச்சியாகவே இப்போது அவரது குறித்து 'என்னை' உங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கிறேன்.

இலக்கியத்திற்கு வாழ்க்கைப் பட்டுவிட்ட எவரும் நல்ல இலக்கியங்களைத் தேடிப்பிடித்துப் படித்தேயாக வேண்டும். அதன் விளைவாக நல்ல இலக்கியங்களைப் படைத்தேயாகவேண்டும். இதுதான் இலக்க்கியவியல் விதி. இந்த விதியின்படிதான் இங்கே நல்ல வாசகனுக்கும், நல்ல வாசகனாகவும் இருக்கிற படைப்பாளிக்கும் உண்மையான படைப்பாளிகளும் உண்மைகளைப் படைப்பாவர்களும் மிகவும் எளிதில் தட்டுப்பட்டு வருவார்கள். அப்படித் தான் எனக்கு ஜெயந்தி சங்கர் சட்டெனத் தட்டுப்பட்டார்.

என்னைப் பொறுத்தவரை மிகவும் சுலமானது எது தெரியுமா? ஒரு படைப்பாளியாக வாழ்ந்து நல்ல படைப்புகளைத் தருவதுதான். மிகவும் கடினமானது எது தெரியுமா? படைப்பாளியைப் போன்று நடித்து படைப்புகளைப் போல எழுதுவதுதான். ஜெயந்தி சங்கருக்கு அந்தக் 'கடினம்' நேரவில்லை. படைப்பது என்பது பிரசவவேதனை போன்றது என்றும் படைத்து முற்றுப்புள்ளி வைத்தவுடன்தான் அந்த வேதனையும் வலியும் தீரும் என்றெல்லாம் சொல்கிறார்களே என்று நீங்கள் கேட்கலாம். அது உண்மையில்லை. எழுதத் தெரியாத ஒருவர் எழுதத் தெரியாது இன்னொருவருக்குச் சொன்ன உண்மை என்றே அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய்
காசுக்கு ரெண்டு விற்கச் சொல்லி
கடுதாசி போட்டானாம் வெள்ளைக்காரன்

என்கிற ஆங்கிலேயரின் நெற்றிப் பொட்டில் அறைந்த இந்த பாடல் வரிகளைப் படைத்த யாரோ ஒரு நாட்டுப்புறத்தான் பிரசவேதனைப் பட்டது போல தெரியவில்லையோ ?

அட அதைக்கூட விடுங்கள்

அவன் போருக்குப் போனான் - நான்
போர்களமானேன் - அவன்
வேல் கொண்டு சென்றான் -நான்
விழிகளை இழந்தேன்


என்கிற இதயம் துளைக்கிற இந்த இலக்கியம் பிரசவவேதனைப் பட்டு எழுதியதுபோலவா தெரிகிறது ?


படைப்பாளி போகிறபோக்கிலே தான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டுப் போய்விடுவான். படைப்பாளி போன்றவன் படைப்பு வரமால் படுத்து உருண்டு
'படைத்ததை' நூலாக்கித் தந்து படிப்பவர்கள் நொந்து நூலாவதற்கும் வழிவகுப்பான். படைப்பு நிமித்தமான பிரசவவேதனை (?)யில் முக்கி முனகிக் கூச்சலிட்டுக் கொண்டு இருப்பவர்களுக்கிடையில் சன்னமாக, சங்கீதமாக கம்பீரமாகப் பாடிக் கொண்டிருப்பவர்களை நல்ல வாசகர்களும் நல்ல இலக்கியம் விரும்புவோரும்தான் கண்டுபிடித்துக் காப்பாற்ற வேண்டும். அவ்வாறு பாதுகாத்துப் பாராட்டவேண்டிய படைப்பாளியாகவே நான் ஜெயந்தி சங்கரைப் பார்க்கிறேன்.

நல்ல இலக்கியம் என்பது படைக்கிறவனையும் அதைப் படிக்கிறவனையும் மேம்படுத்தும் என்று ஜெயகாந்தன் ஒருமுறை சொன்னார். இதுதான் உலக அளவிலான உண்மையான இலக்கியக் கோட்பாடு. இந்தக் கோட்பாட்டில்தான் ஜெயந்தி தானும் மேம்பட்டு தன் படைப்புளைப் படிக்கிறவர்களையும் மேம்படுத்துகிறார். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளைப் படிக்கிறவர்களால் இவ்வுண்மையை உணர முடியும்.

ஏனெனில் அவருடைய படைப்புகள் நுட்பமானது. ஊன்றிக் கவனித்து உள் நுழைந்து பார்க்கும்போதுதான் அவற்றின் நுட்பம் நமக்கு விளங்கும். போராட்ட வாழ்க்கை, வாழ்க்கைப் பொராட்டம் இவையிரண்டுமே இலக்கியத்திற்கான இரு தண்டவாளங்கள். பெருவாரியான கண்ணதாசனின் படைப்புகள் வாழ்க்கைப் போராட்டத்தைச் சொன்னது. நிகழ்காலத்தில் ஜெயகாந்தன் வாழ்க்கைப் போராட்டத்தை எழுதுகிறார் என்றால் காசி ஆனந்தன் போராட்ட வாழ்க்கையை எழுதிக்கொண்டிருக்கிறார்.

இவ்விரண்டு வகையில் ஜெயந்தியின் படைப்புகள் வாழ்க்கைப் போராட்டைத்தையே மையங்கொண்டு சுழல்கின்றன. சுடர்கின்றன. மனித உளவியலை உளைச்சலை மிகத் திறமையாகப் படம் பிடித்துக்காட்டும் வல்லமை ஜெயந்திக்கு சர்வ சாதாரணமாகக் கைகூடி வருகிறது. இக்கூற்றை நம்புவதற்கு விரும்புகிறவர்கள், இத்தொகுப்பில் உள்ள 'நுடம்' அல்லது 'நாலேகால் டாலர்' அல்லது 'நிஜமற்ற நிழல்' ஆகிய கதைகளில் ஒன்றை அல்லது இத்தொகுப்பில் உள்ள நான் சுட்டிக்காட்டாத ஏதாவதொரு கதையை உடனடியாகப் படித்துவிட்டு அதற்குப்பிறகு என் அணிந்துரைக்கு வரலாம்.

அயல் மண்ணில் வாழப்போனவர்கள் அல்லது பிழைக்கப்போனவர்கள் எத்தகைய அவலங்களுக்கு ஆட்படுகிறார்கள் என்பதை அம்மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கிற ஜெயந்தி சொல்லாமல் அல்லது ஜெயந்தி போன்றவர்கள் சொல்லாமல், வேறு யாரால் சொல்லமடியும்? சிங்கப்பூரின் சுகம் பற்றி அவ்வூருக்குச் சுற்றுலா போய் வரும் யாரும் எழுதலாம். அதன்சோகம் பற்றி ஜெயந்தி போன்ற படைப்பாளிகளால் மட்டுமே எழுத முடியும். அங்கெல்லாம் பாராட்டுவதற்கென்று எதுவுமே இல்லையா? என்றும் சிலர் கேட்கக் கூடும். 'புறம்' பாராட்டவும் அல்லது 'புறம்' பேசவும் நாட்டிலே நிறையபேர் இருக்கிறார்கள். அவர்கள் 'ஜாய்•புல் சிங்கப்பூர், கலர்•புல் ' என்று பாடிக்கொண்டிருப்பார்கள். ஆனால், 'அகம்' பார்க்க இங்கே எத்தனைபேர் இருக்கிறார்கள் ? அந்த 'அகம்' பார்க்கிற பணியைத்தான் ஜெயந்தி சங்கர் தன் படைப்புகளின் வாயிலாகச் செய்துகொண்டிருக்கிறார். அழுகிக் கொண்டிருப்பதை அடையாளம் காட்டுவதுதான் ஒரு மருத்துவரின் கடமையே தவிர, நன்றாக இயங்கும் உறுப்புகளைப் பாராட்டிக்கொண்டிருப்பது அவன் வேலையாக இருக்க முடியாது. அப்படி இருக்கவும் கூடாது. ஜெயந்தி சங்கர் ஒரு மருத்துவராகவே தன் கடமையை மிகத் துல்லியமாகச் செய்து வருகிறார்.

விபத்து போல ஒரு நல்ல சிறுகதையை, அல்லது ஓரிரு நல்ல சிறுகதைகளை எழுதிவிட்டு அதன் வாயிலாகக் கிடைக்கும் வரவேற்பில் தொடர்ந்து மோசமான பத்து கதைகளை எழுதித்தள்ளுகிற அல்லது ஒரு கதையில் தான் எடுத்த நற்பெயரைப் பத்து கதைக எழுதிக் கெடுத்துக் கொள்கிற நிலையில் ஜெயந்தி இல்லை. அவர் பத்து சிறுகதை எழுதினார் என்றால், அதில் எட்டு கதைகள் இலக்கிய இதயங்கங்களில் என்றென்றும் உலா வரும் தன்மை பெற்றுத் திகழ்கின்றன. நாகரீகத்தின், செல்வவளத்தின், சட்டத்தின், பாதுகாப்பில் நிகழ்த்தப்படும் மனித நேயமற்ற நுட்பமான வன்முறைக்கு எதிரான அறச்சீற்றமாகவே அவரது படைப்புகள் கருக்கொண்டு உருக்கொள்கின்றன. தமிழ் இலக்கியச் சூழலில் இது மிகவும் அரிதான வரவேற்கத் தகுந்த நிலை.


தமிழின் மிகச்சிறந்த படைப்பாளிகளின் வரிசையில் ஜெயந்தி சங்கர் இடம் பெற்றிருக்கிறார் என்பதை ஒரு வாசகனாக நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். அவ்வாறு சொல்வதில் பெருமிதமடைகிறேன். "எனக்குத் தூக்கம் வரல்லேன்னா புத்தகம் எடுத்துப் படிப்பேன். உடனே தூக்கம் வந்துவிடும்", என்று சில பாவிகள் சொல்லக்கேட்டிருக்கிறேன். "மாபாவி ! ஆகக்கூடி உன்னைத் தூங்க வைக்கிற கருவியா புத்தகம்?", என்றும் அவர்களிடம் கேட்டிருக்கிறேன். படிப்பவனைத் தூங்க வைப்பது அந்நூலைப் படைத்தவனின் குற்றம் என்றுகூட ஒருவன் என் மீது எகிறிப் பாய்ந்தான். எழுத்தின் இலக்கணம் விழிக்க வைப்பதன்றி உறங்க வைப்பதல்ல ! படைத்தவன் உறங்கலாம். அது படைப்பாக இருக்கும்பட்சத்தில் அதைப் படித்தவர்கள் உறங்க மாட்டார்கள்.

"நாலேகால் டாலர்" கதையை எழுதிய இரவில் ஜெயந்தி நன்றாகவே தூங்கியிருக்கக்கூடும். அதைப்படித்த இரவில் என்னால் தூங்க முடியவில்லை.


நல்வாழ்த்துக்களுடன்
ஜெயபாஸ்கரன்
september 2005

No comments: