Showing posts with label சிறுகதைகள். Show all posts
Showing posts with label சிறுகதைகள். Show all posts

Tuesday, May 25, 2010

மனுஷி

- ஏ.பி. ராமன்





சிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் 'மனுஷி' சிறுகதைத் தொகுப்பு நூலைப்பற்றிய சிறு விமரிசனம் இது. இவர் சிங்கப்பூர் எழுத்தாளரா தமிழக எழுத்தாளரா என்பதை நிர்ணயிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லையென்றலும், சிங்கப்பூரில் குடியேறி 20 வருடங்களாக நிரந்தரமாக இங்கே வசித்துக் கொண்டிருக்கும் இவர் நம்மைப் பொறுத்தவரை சிங்கப்பூரர் தான். காரணம், சிங்கப்பூர் வாழ்க்கையை இந்த அளவுக்கு உவமித்து உணர்த்தும் தன்மையை மிகவும் நுட்பமான வார்த்தைகளால் கச்சிதமாகக் கையாண்டு வரும் இவரை உள்நாட்டு எழுத்தாளர்களின் முன் வரிசையில் தாராளமாக நிறுத்தலாம். முன்னர் வெளியான இவருடைய 'நாலேகால் டாலர்' மற்றும் 'பின் சீட்' தொகுப்புகளும் சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்காசிய்ட நாடுகளில் பெரிதும் பாராட்டப்பட்டதோடு இந்திய எழுத்துல ஜாம்பவான்களாலும் பேசப்பட்டன. பெரும்பாலான கதைகளில் சிங்கப்பூர் சூழலை அதிக அழுத்தத்துடன் விவரித்துள்ளார். அவை எழுதப்பட்ட நோக்கத்தையும் நிறைவேற்றி வைக்கின்றன. அந்த முயற்சிக்குத் தேவையான தைரியம் இந்நூலாசிரியருக்கு இருக்கவே செய்கிறது.

குறுகிய காலத்தில் 13 நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் சிறுகதைத் தொகுப்புகள் தவிர 'வாழ்ந்து பார்க்கலாம் வா', 'நெய்தல்' ஆகிய இரு நாவல்கள், 'முடிவிலும் ஒன்று தொடரலாம்' என்ற குறுநாவல் தொகுப்பு, 'ஏழாம் சுவை' என்ற கட்டுரைத் தொகுப்பு, சீனப்பெண்களின் வாழ்வையும் வரலாற்றையும் ஆய்வுப்பூர்வமாக எழுதியுள்ள 'பெருஞ்சுவருக்குப் பின்னே' என்ற நூல், சீனக்கவிதைகளின் மொழிபெயர்ப்பு+தொகுப்பு மற்றும் சில நூல்களும் இவருக்குப் புகழ் சேர்த்து வருகின்றன.

ஜெயந்தி சங்கரின் எழுத்துகளில் அனுபவத்தின் சாயல் அதிகம் தெரியும். எந்த உண்மையான எழுத்தாளனின் கற்பனைக்கும் அனுபவம் அவசியம் தேவையாகிறது. இலக்கிய எழுத்தாளனுக்கு அனுபவத்தின் அவசியம் புரியும். அனுபவத்திலும் அனுபவித்தலிலும் எத்தனையோ வகையுண்டு. ஒரு எழுத்தாளனுக்கு அனுபவமாகப் படுவது மற்றவனுக்கு சூன்யமாகப் படலாம். ஊர் உலகம் சுற்றும் எழுத்தாளனுக்கும் தன் சிருஷ்டிக்குத் தேவையான அனுபவத்தைப் பெற முடியாமற்போகலாம். ஆனால், அதை விடவும் அதிகமான ஆழமான, அதனினும் மாறுபட்ட ஒரு முழு அனுபவத்தை வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் ஓர் எழுத்தாளன் பெற்று விடலாம். அனுபவம் அவரவர் கண்ணோட்டத்தைப் பொறுத்தது தான். உலகம் சுற்றும் தமிழ் எழுத்தாளர்களில் பலரும் கூட தாம் வாழ்ந்த இடங்களையும் அவ்விடங்களின் வாழ்க்கை முறைகளையும் தம் எழுத்தில் பிரதிபலிக்க மறந்ததில்லை.

மறைந்த எழுத்தாளார் சுஜாதா சுற்றாத நாடில்லை. ஆனாலும், ஸ்ரீரங்கத்தையும் திருச்சியையும் தொட்டு எழுதுவதில் அவர் கடைசிவரை ஒரு தனித் துடிப்பு காட்டினார். திருநெல்வேலி வட்டாரத்தை இழுத்து வருவதில் புதுமைப்பித்தன், வல்லிக்கண்ணன், ஸ்ரீவேணுகோபாலன் போன்றோர் போட்டி போட்டனர். தி. ஜானகிராமனுக்கு தஞ்சாவூர்ப்பகுதி தொக்கு மாதிரி. மலேசிய சிங்கப்பூரில் பல ஆண்டுகள் வாழ்ந்த கு. அழகிரிசாமி தமிழ்நாட்டு இடைசெவல் மண்ணை ஆங்காங்கே தூவ மறக்காதவர். அந்தக் கால எழுத்து மேதையான க.ந.சுப்ரமணியம் ஐரோப்பிய நாடுகளுக்குப் போகும் போதும் சாத்தனூரையும் சர்வமான்ய அக்கிரகாரத்தையும் குறிப்பிடுவதில் தனி ஆர்வம் காட்டினார்.

ஆனால், இதெல்லாம் அந்தக்கால விஷயமாகிவிட்டது. இப்போது பலரும் தங்கள் அனுபவ வாழ்க்கையிலிருந்து எதையும் பெறவோ பெற முயலவோ இல்லை என்பது தான் உண்மை. அதற்குக் காரணம், இன்றைய எழுத்தாளர்களின் பெரும்பாலான படைப்புகளில் இலக்கிய நோக்கம் குறைவு என்பது தான்.

சிறுகதைகளில் அனுபவங்களுக்கு இலக்கிய உருவம் கொடுப்பதும் சுலபமல்ல தான். காரணம், அனுபவத்தின் பரப்பளவைவிட அதன் ஆழம் தான் எந்த இலக்கியத்திற்கும் இன்றியமையாததாகிறது.

இவற்றை இங்கு குறிப்பிடுவதற்கான காரணம் ஜெயந்தி சங்கரின் சிறுகதைகளில் பிறந்த நாடும் வாழும் நாடும் பசுமையாக ஆத்மார்த்தமான சித்தரிப்பு காண்கிறது. மதுரை, ஒரிஸா, அஸ்ஸாம் இவற்றுடன் சிங்கப்பூரின் செங்காங், பீஷான், தேக்கா பகுதிகள் சிரமமின்றிச் சேர்கின்றன. மனித உறவுதான் அந்த இணைப்பிற்கு அங்கே மேம்பாலமாக அமைகிறது. இந்தியக் கண்ணோட்டத்திலும் சரி, சிங்கப்பூர் கண்ணோட்டத்திலும் சரி இவருடைய கதைகளில் இவரின் அனுபவ இழைகள் சுகமாகவே பின்னப்பட்டுள்ளன.

"சிறுகதை வடிவம், மிகநுட்பமான உறவுச்சிக்கல், நுண்ணிய நிகழ்வுகள், நேர்த்தி, மனவோட்டங்கள், கதை சொல்லல், அழகியல் போன்ற அனுபவம் சார்ந்தவற்றில் கவனம் செலுத்தி இயங்குவது தவிர்க்க முடியாததாகிறது", என்கிறார் நூலாசிரியர் தன் முன்னுரையில். நூற்றுக்கு நூறு உண்மை.

நுட்பமான உறவுச்சிக்கலை, நுண்ணிய நிகழ்வுகளாக கணவன் மனைவி இருவரின் மனவோட்டங்களாக 'மனுஷி' என்ற தலைப்பில் எழுதியிருக்கும் ஜெயந்தி சங்கரின் கதை சொல்லல் பாணி படிப்பவர்களின் உணர்வுகளுக்கு ஒரு தாலாட்டு! சொற்களை அவர் தராசு கொண்டு நிறுத்து நிறுத்துப் போடும் பாங்கு அருமை. மீனா நம் மனத்தோடு ஒன்றித்து விடுகிறாள். நம்மைப் பொருத்தவரை இது சிங்கப்பூர் கதை. ஆனால், ஜிம்பாப்வேயில் நிகழ்ந்தாலும் இதே பாத்திரங்களும் மனவோட்டங்களும் மிக நன்றாகவே பொருந்தும்.

'திரை' - இது முற்றிலும் சிங்கப்பூர் பின்னணி! பெண் குழந்தை வேண்டித் தவமிருக்கும் ஓர் இளந்தாயின் புலம்பல், குமுறல், ஆத்திரம், வெறுப்பு என்று ஒரு நவரச நாயகியாகச் சித்தரிக்கப்படும் தாயின் மனவுணர்வுகளை, பிரசவ மருத்துவமனைச் சூழலை, எதைப் பெற்றால் என்ன என சமாதானம் செய்யும் பெரியவர்களைச் சாடும் பெண் மனதை, பிரசவித்த பெண் படும் அன்றாட அவஸ்தைகளை அனுபவ நயத்துடன் சொல்கிறார். முதல் நாள் தாய்ப்பால் குடிக்காத குழந்தை மறுநாள் குடிக்க ஆரம்பித்ததும் அந்தத் தாய்க்கு மட்டுமல்ல நமக்கும் உள்ளம் பூரிக்கிறது. திரை - ஒரு நேரான நடை பாதை. தடையில்லாமல் தடுமாறாமல் அவரால் மட்டுமில்லாமல் வாசகனாலும் நடக்க முடிகிறது.

சுகாதார சிங்கப்பூரில் 'சார்ஸ்' அரக்கன் நிகழ்த்திய லீலைகளில் உயிரிழந்த சிந்துவையும் மகன் பிரவீணையும் சுற்றிச் சுழன்றோடும் கதை 'சுவடு'. குறைவான நிகழ்வுகளை நிறைவாகச் சொல்லியிருக்கிறார்.

'சொல்லாத சொல்', 2006ல் நடைபெற்ற பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியில் முதல் தகுதி பெற்ற கதை.

'அவள்', 'சாயல்', 'பாலா' ஆகிய கதைகள் சிங்கப்பூர் தொடர்புகொண்டவை. 'பாலா'வில் சொன்னதைச் செய்யும் கையாளாக, எடுபிடியாகத் திரியும் அசட்டு பாலாவுக்கும் ஓர் அரிய அதிர்ஷ்டம் வருகிறது. சிங்கப்பூரிலிருந்து சொத்து சுகங்கள்! ஆனால், அந்த வெள்ளை உள்ளமோ அதைத் தூக்கியெறிந்து விட்டு வீட்டு வேலைகளை வழக்கம் போலத் தூக்கிச் சுமக்க ஓடுவது நெகிழ்வைத் தருகிறது.

'ஒரே கேள்வி', 'பொன்சாய்', 'நான்கிலக்கம்' ஆகிய கதைகள் முற்றிலும் சிங்கப்பூர் எண்ணையில் பொறித்துச் சுட்டெடுக்கப்பட்ட பலகாரங்கள்! சுவை சுமார் தான் என்றாலும், பள்ளிக்கூடக் கல்லூரி இளசுகளைச் சுற்றியோடும் நிகழ்ச்சிகளைக் கொண்டவை. 'நான்கிலக்கம்' கதையில் சீனப்பிரயோகம் சற்று மிகையாகத் திணிக்கப்பட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. உள்ளூர் வாசகர்களுக்கு இந்த 'சப்ஜெட்' சற்று அலுத்துப் போனது. தமிழக வாசகர்கள் இதை 'டைஜெஸ்ட்' பண்ண சிரமப்படுவர். சிங்கப்பூரில் பேசும் தமிழ் மாறி வரும் இந்நாளில் 10 ஆண்டுகளுக்கு முன்னான பேச்சுத் தமிழை வலிந்து புகுத்துவது போல் அமையக் கூடாது என்பது என் கருத்து.

நன்றாக வளரும் ஓர் எழுத்தாளரை வளர்ந்த எழுத்தாளராக மாற்றும் அரிய வாய்ப்பு வாசகர்களுக்கும் கிடைத்திருக்கிறது. ஜெயந்தி சங்கரின் 'மனுஷி' மதி நிலையத்தின் வெளியீடு. இங்கு, இது தவிர மற்ற தொகுப்புகளான 'திரைகடலோடி', 'பின் சீட்' மற்றும் 'நாலேகால் டாலர்' கிடைக்கும்.

நன்றி: முல்லைச்சரம்

Thursday, May 06, 2010

'பின் சீட்'




- பாஸ்டன் பாலாஜி


கங்கா பிரவாகமும் தீபாவளி விருந்தும்


இணையத்தில் கிடைக்கப்பெற்ற அந்த வார கல்கியின் இரண்டொரு பக்கங்களை அச்சுப் பிரதி எடுத்து வந்திருந்தேன். தவறுதலாக தரையில் விழுந்திருந்தது. இரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் ஓடி வந்தாள். இலையுதிர் மரங்களில் இருந்து விழும் வண்ணம் மாறிய இதழ்களை கவனியாமல் அவசரமாக ஓடும் நதி போல் அவற்றை மிதித்துக் கொண்டே அன்றைய தினத்தில் நடந்தவற்றை சொல்லி முடிக்கும் வேகத்துடன் விவரித்துக் கொண்டிருந்தாள்.

அவளைக் கையமர்த்தி, 'எதன் மேல் நிற்கிறாய் தெரியுமா? சரஸ்வதி!' தொட்டு ஒத்திக் கொள்!' என்று கோபமும் அதிகாரமும் கலந்த அணைக்கட்டாய் அவளை நிறுத்தினேன்.

'பின் சீட்' தொகுப்பில் வரும் கதைகளும் இப்படித்தான்.

வாழ்க்கையில் புறக்கணிக்க எத்தனிக்கும் விழுமியங்களையும் மறக்க விரும்பும் கோட்பாடுகளையும் விட்டுவிட்ட கலாச்சாரக் குழப்பங்களையும் முரணாக வினாக்கள் ஆக்கும் தொகுப்பு.

மொத்தம் பதினாறு சிறுகதைகள். சிங்கை சஞ்சிகைகள் கல்கி மற்றும் இணைய இதழ்களில் வெளியானவற்றின் தொகுப்பாக மதி நிலையத் தொகுப்பாக வெளியாகியுள்ளது.

ஒவ்வொன்றிலும் பலவிதமான நாயகர்கள் தென்படுகிறார்கள். அம்மா கோந்துகள்; மக்கள் செல்வம் தங்களுடன் பசையாக இருக்க விரும்பும் பெற்றோர்கள்; பற்றற்ற மாந்தர்கள்; ஆசையை விட நினைப்பவர்கள்; விட்டதாக நினைப்பவர்கள். எல்லோரையும் உலாவ விட்டு அடர்த்தியான கதைகளில் மூழ்க வைக்கிறார் ஜெயந்தி சங்கர். நகைச்சுவை அரிதாகவே எட்டிப் பார்க்கிறது. வெரைட்டியான சிங்கப்பூரில் உரையாடல்களின் செழுமை மூலம் எட்டு திசைகளாக விரியும் சம்பவங்கள்.

நதி பெருக்கெடுத்து ஓடுகிறது. கரும்பு ரசம் போன்ற சுவைநீர், கடலில் திடீரென்று கலந்து உப்புத் தண்ணீர் ஆகிறது. 'அம்மா பேசினாள்' கிரியும் மகாமக நதியாக சாதிக்க நினைத்து ஓடிப் போய் களைக்கிறான். குடிக்கத் தகுதியற்ற நீரானாமோ என்று சோம்பித் துவளாமல், கயலும் கெண்டையும் எதிர்நீச்சலடிக்கும் சூழலை அமைத்துத் தர ஆசைப்படுகிறான்.

புத்தகத்தின் தலைப்புக் கதையான 'பின் சீட்' தமிழ் சினிமா போல் சூடான திரைக்கதையாக விரிகிறது. சிறு வயது மதிப்பீடு போராட்டங்களினால் ஏற்படும் நெருக்குதல்கள்; பெண்களைத் தவறாகப் புரிந்து கொள்ளுதல்; நாயகி தீபா, 'தம்பிக்கு எந்த ஊரு' ரஜினியாக மனமாற்றம் அடைதல்; நம்பர் ஒண்ணாக இருப்பதை விட உச்சங்களைத் தொடுபவர்களை உருவாக்கும் மனப்பக்குவத்தை எட்டுதல் போன்ற மேலாணமையும் மசாலாவும் கலந்த கதை.

- மேலை நாட்டுக் கலாச்சாரமான concierge services-ஐ அறிமுகப்படுத்தும் 'சேவை';
- மக்களை எடை போட்டு நிர்தாட்சண்யமாக்கும் நிறவெறியையும், செல்நெறி தேர்ந்ந்தெடுத்தல் குழப்பங்களையும் வெளிக்கொணரும் 'கண்ணாலே பேசிப் பேசி';
- காலத்திற்கேற்ப காலணிக்குள் நுழைந்து பொருத்திக் கொண்ட ஏபிசிடிக்களையும், பழைய செருப்புக்குள் தைத்து விடப்பார்ர்ப்பவர்களின் நடுக்கங்களையும் சமாதானப்படுத்தும் 'பார்வை'.

பல்வேறு களங்களில் பயணிக்கும் சிற்றருவிகள்.

ஓடத்தில் பேரருவியாக என்னை மிகவும் ஆர்ப்பரிக்க வைத்தவையாக 'ஜேட் வளையல்', எந்தையும் தாயும், அக்கா மற்றும் திரவியம் ஆகியவற்றை குறிப்பிடலாம்.

நிறம் பார்த்தோ வயசைப் பார்த்தோ அன்பு உருவாகாது. 'மிருகா' என்றழைக்கும் கிழவியின் பாசம்; ரங்கோலியாக வாழ்க்கையை ரசிக்கும் கிழவியின் பவள வளையல் குறியீடு; உற்றவருக்கு உடல்நலம் சரியில்லை என்னும்போது உள்ளார்ந்து எழும் மனக்கிலேசம்; கோடை கால நூறு பாகை வெப்பம் எல்லோரையும் சுட்டெரிக்கும். சத்தியமான சூரியனின் கதிர் போல் அனைவருக்குள்ளும் தகிக்க வைக்கும் மனிதத்தை வெளிக்கொணரும் கவிதையான கதை 'ஜேட் வளையல்'.

பெண் எழுத்தாளரின் மெல்லிய குரல் வெளிப்படும் ஆக்கமாக 'அக்கா' . வீடற்ற முதியவர்களின் நிலை குறித்து உணர்த்தும் 'திரவியம்'. வீடிருந்தும் வாசலிருந்தும் அனாதரவாகி அன்னியப்படும் மாடி வீடுகளைத் தொடும் 'எந்தையும் தாயும்'. ஒவ்வொன்றும் முத்திரைக் கதைகள்.

அக்கா மற்றும் திரவியம் சிறப்பாக எடுத்தாளப்பட்டிருந்தாலும், பளிச்சென்ற முடிவுகளும், அவை உணர்த்தும் தீர்ப்புகளும் சற்றே நெருடலாகவே உள்ளன. உரத்துப் பேசாமல் உணர்ச்சிகளை மட்டும் பேச விட்டிருந்தால் மேலும் மெருகேறியிருக்கும்.

இதே பாணியில் 'அப்பாவின் மனைவி' நாவலுக்குரிய செறிவுடனும் கதாபாத்திரங்களும் கொண்டிருக்கிறது. 'தலைச்சன்' அப்பாவின் மனமாற்றங்களும் சடாரென்று நிகழ்ந்து நம்ப இயலாதவொன்றாக ஆக்குகிறது. ஆசிரியர் இதே பின்புலத்துடன் விரிவாக பிறிதொரு புனைவு வடிவத்தில் இவற்றைக் விரிவாகக் கையாண்டால் நிறைவாக இருந்திருக்கும்.

ஜெயந்தி சங்கரின் பல கதைகளில் போதனையும் ஊடே இடம்பெற்றிருக்கிறது. குறிப்பாக 'உன் காலணிக்குள் நான்' பள்ளிக்கூட Moral Science பாடம் போல் தென்பட்டது. குடிகாரனின் லீலைகளை விவரிக்கும் 'நான் அவனில்லை'யும் மகப்பேறின் மகத்துவத்தை முன்வைக்கும் 'மழலைசொல் கேளாதவ'ரும் திறம்படக் கையாண்டிருந்தால், தற்போதைய நிலையில் வாசகனுக்கு குற்றவுணர்வு கலந்த அயர்ச்சிக்கு பதிலாக, சரியான தாக்கங்களைக் கொடுத்திருக்கும்.

இந்தத் தொகுப்பில் நான் முன்னமே வாசித்திருந்தது 'கடைசிக் கடிதம்' மட்டுமே. மீண்டும் வாசிக்க ஆரம்பிக்கும் முன்னே மனத்தில் தங்கிப் போன நினைவுகளை மீட்டெடுத்து, மீள்வாசிப்பில் மறக்கவியலாத நாவலின் பன்முகப் பரிமாணங்களை வாசகனுக்குள் பாய்ச்சும் தன்மையுடன் விரிந்தது.

பிரச்சினைகளைக் கண்டு ஓட வேண்டுமா? தன்னால் தீர்வு காண முடியாத அச்சத்தால், பிறரின் முடிவுக்கே விட்டுச் செல்வது சிறந்ததா? பேசாப்பொருளை எப்படி அறிமுகம் செய்வது? வாழ்க்கையில் எடுத்த முடிவுகள் சரிதானா? தவறு என்றால் எப்போது மாற்றிக் கொள்ளலாம்? மன்னிப்பு எதற்கு தேவை? யாருக்கு பாவம்? யார் பாவம்?

ஒவ்வொரு கதையிலும் வினாக்களும் கதாவாசகனின் அனுபவங்களுக்கு ஏற்ற அர்த்தங்களும் புலப்பட்டாலும், அவை யாவும் மிக சிறப்பாக 'கடைசிக் கடித'த்தில் வெளியாகியுள்ளது.

மஞ்சள் ரிப்பன், ஸ்பாஸிர்ரிஸ் போன்ற வினோத பதங்களை சிங்கப்பூரை எழுத்தில் மட்டுமே தரிசித்தவர்களுக்காக இன்னும் விரிவாக எடுத்துரைத்து லாவகமாக கதையில் விவரித்து, தெரியாத விஷயங்களை அறிமுகம் செய்வித்திருக்கலாம். கதைகளில் பெரும்பாலானோர் குற்றமற்ற உத்தமராக இருப்பதை போல் வார்த்தைகளில் வரும் பிழைகளைக் களைந்தெடுத்தால் வாசிப்பு ஈர்ப்பு அதிகரிக்கும்.

பாரத கண்டத்தை விட்டுப் போனாலும் தீபாவளி கொண்டாடுவது தொடர்கிறது.

பத்தாவது படிக்கும் வரை ஆயிரம் வாலா-வா அல்லது அணுக்கத்தில் ஆட்டம் பாம் போடுவதா என்னும் போட்டா போட்டி. கொஞ்சம் கெத்து வந்த வயதில் ரேமண்ட்ஸே வாங்கித் தைக்க அப்பா தயார் என்றாலும் கேப் காக்கியோ, ஏபர்கோம்பி •பிட்ச் பொன்னெழுத்துப் பொறிக்கப்பட்ட ஆடையோ தாங்கி உலா வரும் ஒளிக்கதிர் போட்டி. தலை தீபாவளிக்கு மிடுக்கு; ஊர் விட்டு ஊர் வந்திருந்த போது கொண்டாடிய ராம் லீலா மேளா; அமெரிக்காவோ ஆப்பிரிக்காவோ, அயல்நாட்டில் இருக்கும் பத்து தெற்காசிய குடும்பங்களைக் கஷ்டப்பட்டு ஒன்றுகூட்டி திருவிழா கொண்டாட்டம்.

பெற்றோரை விட்டு, சொந்த ஊரை விட்டு தள்ளி இருந்தாலும், தடாலடியாக பண்டிகை தினத்தன்று 'உள்ளேன் அய்யா' போட்டு, சாப்பிடத்தெரியாத தலைவாழை இலையில் அஜீரணம் தரும் எண்ணெய் சமாச்சாரம் தொட்டு திரட்டிப்பால் இரண்டாம் முறை வாங்கி, பூண்டு ரசத்தை கொஞ்சம் தரையில் இருந்து எடுத்து இலைக்குள் தள்ளி, தயிர் சாதத்துக்குப் பிறகு இராஜாவாக பிறக்கும் ஆசையில் பாயசம் சாப்பிட சிரம்பப்பட்டாலும் வயிறு முட்ட வைக்கிறது பின் சீட் தொகுப்பு.

சுற்றாரும் வம்பும் இனிப்பும் தீபாவளி லேகியமும் கலந்து பூர்விகத்தை திரும்பிப் பார்க்க சொல்லும் விருந்து.


பின் சீட் (2006)

பக்கங்கள் 153/ விலை: ரூ 66

வெளியீடு:

மதி நிலையம்
2/3 4வது தெரு,
கோபாலபுரம்
சென்னை - 600086

Monday, March 29, 2010

நாலேகால் டாலர் - அணிந்துரை - ஜெயபாஸ்கரன்

ஆழ்மனதின் அறச்சீற்றம்






கடந்த 2004 ஆம் ஆண்டு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவையின் (FETNA) 17ஆம் ஆண்டு தமிழர் திருவிழா மலரைச் சென்னையில் வடிவமைத்துத் தயாரிக்கும் பணியில் அதன் குழுவினரோடு ஈடு[பட்டிருந்தேன். அது ஒரு ஜூன் மாதத்தின் நள்ளிரவு. உலகின் பலநாடுகளிலிருந்தும் அம்மலருக்கும் வந்திருந்த பல்வேறு வகையான படைப்புகளை என் பணியின் நிமித்தம் படிக்கும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. படித்துப் பிழைதிருத்தம் செய்துகொண்டிருந்தேன்.

அதிகம் பேசாதவரும் ஆழ்ந்த இலக்கிய இரசனையாளருமான மலர் வடிவமைப்பாளர் தமிழேந்தி என்கிற இராசேந்திரனும், "சார், இந்த மலருக்கு 'ஈரம்'னு ஒரு கதை வந்திருக்கு சிங்கப்பூர்ல இருந்து. ஜெயந்தி சங்கர்னு ஒருத்தர் எழுதியிருக்காக. ரொம்ப நல்லா இருக்கு சார்", என்று கணிப்பொறிவேலை செய்துகொண்டே என் காதுகளுக்குத் தகவல் சொன்னார். பாறையே வெடித்து வாய்பிளக்கிறதே என்று வியந்து என் கைகளில் இந்த படைப்புகளைத் துழாவி 'ஈரம்' சிறுகதையைத் தேடிப்பிடித்துப் படித்தேன். அதற்குப்பிறகு அன்றைய பணி முடித்து அதிகாலை நான்கு மணிக்கு வழக்கம்போல் பணியிடத்திலேயே படுத்தேன். ஆனால், தூக்கம் வரவில்லை. பிழைப்புக்காக சிங்கப்பூருக்குப் போன தமிழ்நாட்டின் நடுத்தரவயதுப் பெண் ('ஈரம்' கதாநாயகி) என்னை அழ வைத்துக்கொண்டிருந்தாள். பொதுவாகத் திகிலுற்றிருப்பவனை 'பேயறைந்தது' என்பார்கள். அன்று நானும் அப்படித்தான் இருந்தேன். ஒரு சின்ன வித்தியாசம் என்னை ஒரு 'படைப்பு' அறைந்திருந்தது.

மறுநாள் இரவு மலர் தயாரிப்புப் பணிகளின்போது மற்ற படைப்புகளை வடிவமைத்துக் கொண்டே நானும் ராஜேந்திரனும் 'ஈரம்' கதைப் பற்றி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். வேறு ஏதோவொரு வேலைக்காக அதன் வாரங்கழித்து மலர் அச்சாகி வந்தவுடன் ஒட்டுமொத்த மலரைப் பற்றிப் பேசியவாறு அதன் நிறைகுறைகளைப் புரட்டிக் கொண்டிருந்தேன். வேறு ஏதோவொரு வேலைக்காக அங்கே வந்திருந்த யாரோ ஒரு நண்பர், "சாரி, மலர்ல ஈரம்னு ஒரு கதை ரொம்ப நல்லாயிருக்கு சார். ராத்திரி என் வொய்ப்கிட்ட அதைப் பத்திப் பேசிக்கிட்டிருந்தேன்", என்று சொன்னார். ஒரு படைப்பைப் பற்றி இவ்வளவு சிலாகித்தது பொதும் என்று நேற்றைய என் நினைப்பை யாரோ ஒருவர் சம்மட்டியால் அடிப்பதுபோல் அடித்துத் தகர்த்தார். அப்படியெனில் நல்ல படைப்புகள் குறித்து நாம் மௌனமாக இருந்தாலும், 'அதையறிந்தவர்கள்' மௌனமாக இருக்கமாட்டார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நான் உணர்ந்தேன். அப்போதெல்லாம் ஜெயந்தி சங்கர் என்கிறவர் சிங்கப்பூரில் இருந்து எழுதுகிறார் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். வாகனம் சீராக ஓடுகிறது என்பதைச் சொல்வதற்கு 'டிரைவிங்க்' தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லைதானே ! எனவே ஜெயந்தி சங்கருக்கு என்னைத் தெரியாத நிலையிலும் அப்போது அவரது அந்த ஒரு கதையைச் சுமந்து சென்று பலரிடம் இறக்கி வைத்துக் கொண்டிருந்தேன். அவ்வாறான ஒரு வேளையில்தான் சென்னையில் கவிஞர் மதுமிதாவிடம் தான் 'ஈரம்' கதை குறித்துச் சொன்னபோது, "அய்யோ கடவுளே, அவங்கள உங்களுக்குத் தெரியாதா? அவங்க என்னோட தோழிதாங்க!, என்று அநியாயத்துக்கு மென்மையாகவும் நிதானமாகவும் சொன்ன அவர், " ஜெயந்தி எழுதின தையல் கதையை படிச்சீங்களா" என்று கேட்டு, என் ஆர்வத்தை மேலும் தூண்டினார். அடடா அப்படியெனில்...... அவரது மற்ற கதைகளையும் நாம் படித்து விடலாம் என்று அப்போது நான் நினைத்தேன். அதன் தொடர்ச்சியாகவே இப்போது அவரது குறித்து 'என்னை' உங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கிறேன்.

இலக்கியத்திற்கு வாழ்க்கைப் பட்டுவிட்ட எவரும் நல்ல இலக்கியங்களைத் தேடிப்பிடித்துப் படித்தேயாக வேண்டும். அதன் விளைவாக நல்ல இலக்கியங்களைப் படைத்தேயாகவேண்டும். இதுதான் இலக்க்கியவியல் விதி. இந்த விதியின்படிதான் இங்கே நல்ல வாசகனுக்கும், நல்ல வாசகனாகவும் இருக்கிற படைப்பாளிக்கும் உண்மையான படைப்பாளிகளும் உண்மைகளைப் படைப்பாவர்களும் மிகவும் எளிதில் தட்டுப்பட்டு வருவார்கள். அப்படித் தான் எனக்கு ஜெயந்தி சங்கர் சட்டெனத் தட்டுப்பட்டார்.

என்னைப் பொறுத்தவரை மிகவும் சுலமானது எது தெரியுமா? ஒரு படைப்பாளியாக வாழ்ந்து நல்ல படைப்புகளைத் தருவதுதான். மிகவும் கடினமானது எது தெரியுமா? படைப்பாளியைப் போன்று நடித்து படைப்புகளைப் போல எழுதுவதுதான். ஜெயந்தி சங்கருக்கு அந்தக் 'கடினம்' நேரவில்லை. படைப்பது என்பது பிரசவவேதனை போன்றது என்றும் படைத்து முற்றுப்புள்ளி வைத்தவுடன்தான் அந்த வேதனையும் வலியும் தீரும் என்றெல்லாம் சொல்கிறார்களே என்று நீங்கள் கேட்கலாம். அது உண்மையில்லை. எழுதத் தெரியாத ஒருவர் எழுதத் தெரியாது இன்னொருவருக்குச் சொன்ன உண்மை என்றே அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய்
காசுக்கு ரெண்டு விற்கச் சொல்லி
கடுதாசி போட்டானாம் வெள்ளைக்காரன்

என்கிற ஆங்கிலேயரின் நெற்றிப் பொட்டில் அறைந்த இந்த பாடல் வரிகளைப் படைத்த யாரோ ஒரு நாட்டுப்புறத்தான் பிரசவேதனைப் பட்டது போல தெரியவில்லையோ ?

அட அதைக்கூட விடுங்கள்

அவன் போருக்குப் போனான் - நான்
போர்களமானேன் - அவன்
வேல் கொண்டு சென்றான் -நான்
விழிகளை இழந்தேன்


என்கிற இதயம் துளைக்கிற இந்த இலக்கியம் பிரசவவேதனைப் பட்டு எழுதியதுபோலவா தெரிகிறது ?


படைப்பாளி போகிறபோக்கிலே தான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டுப் போய்விடுவான். படைப்பாளி போன்றவன் படைப்பு வரமால் படுத்து உருண்டு
'படைத்ததை' நூலாக்கித் தந்து படிப்பவர்கள் நொந்து நூலாவதற்கும் வழிவகுப்பான். படைப்பு நிமித்தமான பிரசவவேதனை (?)யில் முக்கி முனகிக் கூச்சலிட்டுக் கொண்டு இருப்பவர்களுக்கிடையில் சன்னமாக, சங்கீதமாக கம்பீரமாகப் பாடிக் கொண்டிருப்பவர்களை நல்ல வாசகர்களும் நல்ல இலக்கியம் விரும்புவோரும்தான் கண்டுபிடித்துக் காப்பாற்ற வேண்டும். அவ்வாறு பாதுகாத்துப் பாராட்டவேண்டிய படைப்பாளியாகவே நான் ஜெயந்தி சங்கரைப் பார்க்கிறேன்.

நல்ல இலக்கியம் என்பது படைக்கிறவனையும் அதைப் படிக்கிறவனையும் மேம்படுத்தும் என்று ஜெயகாந்தன் ஒருமுறை சொன்னார். இதுதான் உலக அளவிலான உண்மையான இலக்கியக் கோட்பாடு. இந்தக் கோட்பாட்டில்தான் ஜெயந்தி தானும் மேம்பட்டு தன் படைப்புளைப் படிக்கிறவர்களையும் மேம்படுத்துகிறார். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளைப் படிக்கிறவர்களால் இவ்வுண்மையை உணர முடியும்.

ஏனெனில் அவருடைய படைப்புகள் நுட்பமானது. ஊன்றிக் கவனித்து உள் நுழைந்து பார்க்கும்போதுதான் அவற்றின் நுட்பம் நமக்கு விளங்கும். போராட்ட வாழ்க்கை, வாழ்க்கைப் பொராட்டம் இவையிரண்டுமே இலக்கியத்திற்கான இரு தண்டவாளங்கள். பெருவாரியான கண்ணதாசனின் படைப்புகள் வாழ்க்கைப் போராட்டத்தைச் சொன்னது. நிகழ்காலத்தில் ஜெயகாந்தன் வாழ்க்கைப் போராட்டத்தை எழுதுகிறார் என்றால் காசி ஆனந்தன் போராட்ட வாழ்க்கையை எழுதிக்கொண்டிருக்கிறார்.

இவ்விரண்டு வகையில் ஜெயந்தியின் படைப்புகள் வாழ்க்கைப் போராட்டைத்தையே மையங்கொண்டு சுழல்கின்றன. சுடர்கின்றன. மனித உளவியலை உளைச்சலை மிகத் திறமையாகப் படம் பிடித்துக்காட்டும் வல்லமை ஜெயந்திக்கு சர்வ சாதாரணமாகக் கைகூடி வருகிறது. இக்கூற்றை நம்புவதற்கு விரும்புகிறவர்கள், இத்தொகுப்பில் உள்ள 'நுடம்' அல்லது 'நாலேகால் டாலர்' அல்லது 'நிஜமற்ற நிழல்' ஆகிய கதைகளில் ஒன்றை அல்லது இத்தொகுப்பில் உள்ள நான் சுட்டிக்காட்டாத ஏதாவதொரு கதையை உடனடியாகப் படித்துவிட்டு அதற்குப்பிறகு என் அணிந்துரைக்கு வரலாம்.

அயல் மண்ணில் வாழப்போனவர்கள் அல்லது பிழைக்கப்போனவர்கள் எத்தகைய அவலங்களுக்கு ஆட்படுகிறார்கள் என்பதை அம்மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கிற ஜெயந்தி சொல்லாமல் அல்லது ஜெயந்தி போன்றவர்கள் சொல்லாமல், வேறு யாரால் சொல்லமடியும்? சிங்கப்பூரின் சுகம் பற்றி அவ்வூருக்குச் சுற்றுலா போய் வரும் யாரும் எழுதலாம். அதன்சோகம் பற்றி ஜெயந்தி போன்ற படைப்பாளிகளால் மட்டுமே எழுத முடியும். அங்கெல்லாம் பாராட்டுவதற்கென்று எதுவுமே இல்லையா? என்றும் சிலர் கேட்கக் கூடும். 'புறம்' பாராட்டவும் அல்லது 'புறம்' பேசவும் நாட்டிலே நிறையபேர் இருக்கிறார்கள். அவர்கள் 'ஜாய்•புல் சிங்கப்பூர், கலர்•புல் ' என்று பாடிக்கொண்டிருப்பார்கள். ஆனால், 'அகம்' பார்க்க இங்கே எத்தனைபேர் இருக்கிறார்கள் ? அந்த 'அகம்' பார்க்கிற பணியைத்தான் ஜெயந்தி சங்கர் தன் படைப்புகளின் வாயிலாகச் செய்துகொண்டிருக்கிறார். அழுகிக் கொண்டிருப்பதை அடையாளம் காட்டுவதுதான் ஒரு மருத்துவரின் கடமையே தவிர, நன்றாக இயங்கும் உறுப்புகளைப் பாராட்டிக்கொண்டிருப்பது அவன் வேலையாக இருக்க முடியாது. அப்படி இருக்கவும் கூடாது. ஜெயந்தி சங்கர் ஒரு மருத்துவராகவே தன் கடமையை மிகத் துல்லியமாகச் செய்து வருகிறார்.

விபத்து போல ஒரு நல்ல சிறுகதையை, அல்லது ஓரிரு நல்ல சிறுகதைகளை எழுதிவிட்டு அதன் வாயிலாகக் கிடைக்கும் வரவேற்பில் தொடர்ந்து மோசமான பத்து கதைகளை எழுதித்தள்ளுகிற அல்லது ஒரு கதையில் தான் எடுத்த நற்பெயரைப் பத்து கதைக எழுதிக் கெடுத்துக் கொள்கிற நிலையில் ஜெயந்தி இல்லை. அவர் பத்து சிறுகதை எழுதினார் என்றால், அதில் எட்டு கதைகள் இலக்கிய இதயங்கங்களில் என்றென்றும் உலா வரும் தன்மை பெற்றுத் திகழ்கின்றன. நாகரீகத்தின், செல்வவளத்தின், சட்டத்தின், பாதுகாப்பில் நிகழ்த்தப்படும் மனித நேயமற்ற நுட்பமான வன்முறைக்கு எதிரான அறச்சீற்றமாகவே அவரது படைப்புகள் கருக்கொண்டு உருக்கொள்கின்றன. தமிழ் இலக்கியச் சூழலில் இது மிகவும் அரிதான வரவேற்கத் தகுந்த நிலை.


தமிழின் மிகச்சிறந்த படைப்பாளிகளின் வரிசையில் ஜெயந்தி சங்கர் இடம் பெற்றிருக்கிறார் என்பதை ஒரு வாசகனாக நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். அவ்வாறு சொல்வதில் பெருமிதமடைகிறேன். "எனக்குத் தூக்கம் வரல்லேன்னா புத்தகம் எடுத்துப் படிப்பேன். உடனே தூக்கம் வந்துவிடும்", என்று சில பாவிகள் சொல்லக்கேட்டிருக்கிறேன். "மாபாவி ! ஆகக்கூடி உன்னைத் தூங்க வைக்கிற கருவியா புத்தகம்?", என்றும் அவர்களிடம் கேட்டிருக்கிறேன். படிப்பவனைத் தூங்க வைப்பது அந்நூலைப் படைத்தவனின் குற்றம் என்றுகூட ஒருவன் என் மீது எகிறிப் பாய்ந்தான். எழுத்தின் இலக்கணம் விழிக்க வைப்பதன்றி உறங்க வைப்பதல்ல ! படைத்தவன் உறங்கலாம். அது படைப்பாக இருக்கும்பட்சத்தில் அதைப் படித்தவர்கள் உறங்க மாட்டார்கள்.

"நாலேகால் டாலர்" கதையை எழுதிய இரவில் ஜெயந்தி நன்றாகவே தூங்கியிருக்கக்கூடும். அதைப்படித்த இரவில் என்னால் தூங்க முடியவில்லை.


நல்வாழ்த்துக்களுடன்
ஜெயபாஸ்கரன்
september 2005

நாலேகால் டாலர் - நூல் முன்னுரை- மாலன்

பரிவில் எழுந்த படைப்புக்கள்


எழுத்தாளர்கள், கவிஞர்கள் இவர்களை எல்லாம் படைப்பாளிகள் என்று உலகம் கொண்டாடுவதுண்டு. அவர்களுக்கே கூட அந்தப் பெருமிதம் உண்டு. 'படைப்பதனால் என் பேர் இறைவன்' என்று கண்ணதாசன் பாடினார். ஆனால் என்னைப் பொறுத்தவரை எழுதுகிறவரின் பெருமை அவரது படைப்பாற்றலில் இல்லை. ஒன்றைப் பிறப்பிப்பதில் பெருமை ஏதும் இல்லை. அது ஒரு இயற்கையான, அல்லது லெளகீக அல்லது physical act. ஏதோ ஒன்றாகப் பிறக்கிறோமே, அதுதான் மகிழ்ச்சிக்குரியது. அதுவும் கணந்தோறும் பிறக்க முடிந்தால் நாம்தான் கடவுள். நன்றிந்தக் கணம் நான் புதிதாய்ப் பிறந்தேன், நலிவிலாதோன், நான் கடவுள் என்று மகாகவி (பாரதி) நமக்குத் தெளிவாகச் சொல்லி வைத்திருக்கிறான்.


பறவைகளுக்கு இரண்டு பிறப்பு உண்டு, முட்டையாக பூமியில் விழுவது ஒன்று. முட்டையை மோதி உடைத்துக் கொண்டு குஞ்சாக வெளி வருவது மற்றொன்று என்று சொல்வார்கள். ஆனால் கதாசிரியர்களுக்கு எண்ணற்ற பிறப்புக்கள். ஒவ்வொரு கதையிலும் அவர்கள் தங்கள் பாத்திரங்களாகப் பிறக்கிறார்கள். அந்தப் பாத்திரங்கள் எதிர் கொள்ளும் சூழ்நிலைகள் தங்கள் மனவுலகில் எதிர் கொள்ள வேண்டும், அந்தச் சூழ்நிலைகளில் அவர்கள் எப்படி நடந்து கொள்ளுவார்களோ அதைப் போல தங்கள் மனவுலகில் நடந்து கொள்ள வேண்டும், அவர்களைப் போல சிந்திக்க வேண்டும். ஒரு கதையையும் - ஒரு நல்ல கதையையும், ஒரு நல்ல கதையையும் - ஒரு சிறந்த கதையையும் வேறுபடுத்துவது, இந்தப் 'பிறப்பில்' கதாசிரியர் எந்த அளவிற்குத் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார் என்பதைப் பொறுத்து அமைகிறது. முற்றிலுமாக தனது பாத்திரங்களாக மாறி விடுகிறவர்களது கதைகள் சிறந்த கதைகளாக அமைகின்றன.


இப்படித் தன்னை இழப்பதற்கு, இழந்து வேறு ஒன்றாக ஆவதற்கு ஒரு மனம் வேண்டும். தன்னைத் தாண்டிப் பிறரை நேசிக்கிற மனம். அது நேச்ம் கூட அல்ல. அதற்குப் பெயர் பரிவு. வடமொழியில் தயை என்று ஒரு சொல்கிறார்களே அது.
ஜெயந்தி சங்கருக்கு இப்படி ஒரு தயை ததும்பும் மனம் வாய்த்திருக்கிறது. அதுதான் அவரை எழுதச் செய்கிறது. மிகையாகச் சொல்லவில்லை. அவரது ஈரம் கதையைப் படித்துப் பாருங்கள். அல்லது நுடம் கதையைப் படித்துப் பாருங்கள், அல்லது இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் கை போன போக்கில் சில கதைகளைத் தேர்ந்து படித்துப் பாருங்கள் நான் சொல்வது சரி என்று புரியும்.


சிங்கப்பூரைப் பற்றி எத்தனையோ கவர்ச்சிகரமான சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான தமிழர்களுக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு, அது ஒரு கனவு பூமி. 70களில் வந்த தமிழ்த் திரைப்படங்கள் அதை ஒரு சொர்க்கலோகமாகக் காண்பித்தன. இப்போதும் கூட சில வணிக மேம்பாட்டுக்கான போட்டிகளில் முதல் பரிசு சிங்கப்பூருக்கு ஒரு சுற்றுலாவாக இருக்கும். (இரண்டாம் பரிசு தங்க நாணயம்) சற்று வளப்பமான மேல்தட்டு வட்டாரங்களில், ' என்ன இன்னுமா நீங்கள் சிங்கப்பூர் பார்த்ததில்லை?' எனக் கண்களில் கேள்வி/கேலி மிதக்கும். பல இளைஞர்களுக்கு, குறிப்பாகக் கிராமப்புற இளைஞர்களுக்கு, சிங்கப்பூரில் போய் வேலை செய்து கை நிறைய சம்பாதித்துக் குடுமபத்தை செளகரியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஜீவ லட்சியம்.


அந்த நம்பிக்கையோடு, ஆண்டுதோறும் பலர், இந்தியாவிலிருந்தும், இலங்கையிலிருந்தும், பிலிப்பைன்சிலிருந்தும், சிங்கப்பூர் வருகிறார்கள். சுற்றுலாப் பயணிகளைப் பற்றி எழுதுகிற அளவிற்கு தமிழ் ஊடகங்கள் இவர்களைப் பற்றி எழுதுவது இல்லை. அந்த ஊடகங்கள் தீட்டிய சித்திரங்களை மாத்திரமே படித்துவிட்டு சிங்கப்பூர் வருகிறவர்கள், ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை சிராங்கூன் வீதிக்குச் சென்று பார்த்தால் அதிர்ந்து போவார்கள். ஜெயந்தி இந்த மனிதர்களைப் பற்றி எழுதுகிறார். இந்த மனிதர்களாக மாறி எழுதுகிறார்.அவர் அனுப்பிய ஈரம் கதையை திசைகளில் பிரசுரத்திற்கு பரிசீலனை செய்யப் படிக்க முனைந்த போது விக்கித்துப் போனேன். வாழ்விற்கு ப்படி ஒரு முகமிருக்கிறதா? என்ற சிந்தனை நாள் முழுக்க மனதில் ஓரமாக இழையோடிக் கொண்டிருந்தது.


இந்தக் கதையின் சிறப்பு அந்தக் கதையை அவர் குரலை உயர்த்தாமல், சினந்து சீறாம்ல், சாபம் கொடுக்காமல், சலித்துப் புலம்பாமல் சொல்லியிருப்பது. அது கதைக்கு ஒரு கூர்மையைக் கொடுக்கிறது. கதை முடிந்து உங்கள் மனச் செவியில் ஒரு விம்மல் கேட்கும். அதுதான் ஜெயந்தியினுடையது. பிஜித் தோட்டத்துப் பெண்களுக்காக விம்முகிற மகாகவியின் விம்மலைப் போன்ற விம்மல் அது.
நுட்பமாகக் கதை சொல்கிற அவரது ஆற்ற்லை அந்தக் கதையைப் படிப்பதற்கு முன்பே நான் அறிந்திருந்தேன். 2002ம் ஆண்டு சிங்கப்பூர் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் உலகம் முழுதும் எழுதப்படும் தமிழ்ப் படைப்புகள் நேற்றும் இன்றும் நடக்கிற வழித்தடங்களை வரைந்துகாட்ட முற்ப்பட்டேன். அதற்காக உலகின் பல பகுதிகளில் எழுதப்பட்ட படைப்புக்களை ஒரு சேர வாசிக்கிற அனுபவம் எனக்குக் கிடைத்தது. ஒரு வாசகன் என்ற முறையில் அது எனக்குக் கிடைத்தப் பெரும் பேறு. ஒரு பேரானந்தம்.


சிங்கைத் தமிழ் இலக்கிய முன்னோடிகள், அவர்களது படைப்புக்கள் பற்றி எனக்குக் கடுகளவு அறிந்திருந்தேன். சமகாலப் படைப்பாளிகள், அதிலும் இளைய த்லைமுறையினர் என்ன எழுதுகிறார்கள் என அறிந்து கொள்ள் ஆர்வமாக இருந்தேன். நண்பர் ஆண்டியப்பன் சில நூல்கள் அனுப்பி வைத்திருந்தார். நூல்களாகத் தொகுக்கப்படாத, நூலாகக் கொண்டுவரும் அளவிற்கு எழுதிக் குவித்திராத எழுத்துக்களைப் படிக்க எண்ணிய போது, நண்பர் பிச்சினிக்காடு இளங்கோ அனுப்பியிருந்த சிங்கைச் சுடர் இதழ்கள் கிடைத்தன. அதில்தான் எனக்கு ஜெயந்தியினுடைய நுடம் படிக்கக் கிடைத்தது. அந்தக் கதை மேற்கொண்டிருந்த உளவிய்ல் அணுகுமுறை சிந்தையை ஈர்த்தது.


ஜெயந்தி சங்கரின் கதைகள் எல்லாவற்றிலும் இந்த சிந்தனையைத் தூண்டும் அம்சத்தைப் பார்க்கலாம். வெறும் கதை சொல்கிற சுவாரஸ்யத்திற்காக அவர் எழுதுவதில்லை. கதையில் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிற கலை நுட்பங்களைக் காப்பாற்றுவதற்காக அவர் எழுதுவதில்லை. வெகுஜனப் பத்திரிகைகள் ஆதரிக்கிற கதையம்சம், சிற்றிதழ்கள் வலியுறுத்துகிற கலைநுட்பம் இவற்றைத் தாண்டிய கதைகள் இவை. அதற்காக இவை இந்த அம்சங்களில் கவனம் செலுத்தாத அல்லது அக்கறை காட்டாத கதைகள் என்பது அர்த்தம் அல்ல. அவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு, அவற்றையும் திறமையாகக் கையாண்டு, ஆனால் அவற்றையும் தாண்டிக் கதைகளை எடுத்துச் செல்கிறார் ஜெயந்தி.
புலம் பெயர்ந்து வாழ்கிற தமிழர்கள் பலர் தங்களது மொழி அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டும், தங்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டும் இலக்கியத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் தவறொன்றும் இல்லை. அது வரவேற்கப்பட வேண்டியதும்கூட. ஆனால் அவை பெரும்பாலானோரது விஷயத்தில் ஆரம்ப வசீகரங்களாக முடிந்து போகின்றன.வயது ஏற ஏற வாழ்வு வேறு இலக்குகளைத் தேடுகிறது. அதன் காரணமாக அவர்கள் சாதனைகள் ஏதும் செய்யாது மறைந்து போகின்றனர்.


ஆனால் ஜெயந்தி சாதிப்பார். ஏனெனில் அவர் அடையாளம் த்ருவதற்கோ, அடையாளம் பெறுவதற்கோ எழுதுவதில்லை. அவர் சிந்தனையைப் பகிர்ந்து கொள்ளவும், சிந்தனையைத் தூண்டவும் எழுதுகிறார். ஆற்றில் மிதந்து செல்லும் மலரல்ல அவர். நதியின் மடியில் கால் பதித்து நிற்கும் கற்பாறை அவர்.
சிங்கைத் தமிழ் எழுத்துகளின் மீது உலகின் கவனத்தை ஈர்க்கக்கூடியவர்களில் ஒருவராக ஜெயந்தி சங்கர் திகழ்வார். அவருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.


18-09-05

நாலேகால் டாலர் - வாழ்த்துரை - ரெ.கார்த்திகேசு

தமிழ்ச் சிறுகதைகள் இன்று உலகத்தின் பல இடங்களிலிருந்து எழுதப்படுகின்றன. தமிழ்ப் புத்திலக்கியம் தனது தமிழ்நாட்டுப் புராதனப் பின்புலன்களிலிருந்து விடுபட்டு, உலகப் பின்புலன்களைக் காட்ட ஆரம்பித்துள்ளது. இது தமிழ்ப் புத்திலக்கியம் உலக மயமாவதன் தொடக்கத் தருணம் என்று கூறலாம்.


புலம் பெயர்ந்த இலங்கை எழுத்தாளர்கள் இந்த விரிவாக்கத்தைத் தொடக்கி வைத்தார்கள். முத்துலிங்கம் போன்ற இலங்கைவாசிகள் எப்படித் தாங்கள் உலகவாசிகள் னார்கள் என்ற கதைகளை அழகாக வடித்து வைத்தார்கள். சுஜாதா தன் இந்திய இருப்பிடத்தை விட்டுப் புலம் பெயராமல், அமெரிக்காவுக்குப் பெயர்ந்தவர்களை எட்டி எட்டிப் பார்த்து விட்டுப் பின்புலத்தைக் கொஞ்சமாக மாற்றினார். புலம் பெயர்ந்து வாழ்ந்து, அமெரிக்க அனுபவங்களை முற்றாக உள்வாங்கி காஞ்சனா தாமோதரன் எழுதி வருகிறார். நா. கண்ணன் ஜெர்மனியில் வாழ்ந்து அந்த வாழ்க்கையின் அனுபவங்களைச் சிறுகதைகளில் பிழிந்து வைக்கிறார். அண்மையில் இரா.முருகன் கணினி மென்பொருள் துறை இந்திய இளைஞர்களிடையே ஏற்படுத்தியுள்ள மாபெரும் மாற்றங்களை வைத்து அவர்கள் இங்கிலாந்துக்கும் தாய்லந்துக்கும் அமரிக்காவுக்கும் அலையும் வாழ்க்கையை அழகான கலைப் படைப்பாக்கித் தந்துள்ளார்.


இப்போது ஜெயந்தி சங்கர்.


மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் உள்ள தமிழ் எழுத்தாளர்களாகிய நாங்கள் எங்கள் சுகமான மூலைகளுக்குள் இருந்தவாறு எங்களுக்குக் கைவந்ததை எழுதி வந்தோம். இதைப் பொதுவான தமிழ் உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை என்றாலும் எங்களுக்குள் நாங்கள் பாராட்டிச் சீராட்டி வைத்துக் கொள்வதில் குறைவில்லை. 130 ண்டுகளுக்கு முன்னால் எங்கள் முதல் தலைமுறைக் குடியேற்றக்காரர்கள் தொடக்கி வைத்த ஒரு பாரம்பரியத்தை இப்போது நாட்டின் குடிமக்களாகிய நாங்கள் தொடர்ந்து வருகின்றோம் என்ற பெருமை எங்களுக்கு இருந்தது.


ஆனால் சிங்கப்பூர் தனது பொருளாதாரத்தைக் காப்பாற்றவும் முன்னேற்றவும் தமிழ் நாட்டிலிருந்து ஒரு "இரண்டாம் குடியேற்றக்காரர்கள்" அலையை ரம்பித்து வைத்து தமிழ்நாட்டிலிருந்து ட்களைக் கொண்டுவந்ததும், அதில் ஒரு சிறுபகுதியினர் நல்ல தமிழ்ப் படைப்பாளர்களாக இருந்ததும், அவர்கள் சிங்கப்பூர் அடையாளத்துடன் எழுத ஆரம்பித்ததும் அங்குள்ள தமிழ் எழுத்தாளர்களின் நித்திரையைக் கொஞ்சம் கெடுத்திருக்கிறது. இந்த இரண்டாம் குடியேற்றக்காரர்கள் வெகுவிரைவில் அவர்கள் நாட்டுக்கு அளிக்கும் பங்குக்கு ஏற்ப நிரந்தரவாசமும் குடியுரிமையும் அளிக்கப்படுவது, அவர்களுக்கும் அசல் சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்கும் உள்ள வேறுபாடுகளையும் அழித்துவிட்டிருக்கிறது.


இதை மலேசியாவில் இருந்து நாங்கள் கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் மலேசியாவின் குடியிறக்கக் கொள்கைகளும், அதன் தீவிரப் பொருளாதாரத் தேவைக்கேற்பத் தளர்வாகி வருகின்றன. நடப்பு அனைத்துலக அரசியலில் பாரம்பரியமாக தொழிலாளர்களை அளித்து வந்த நாடுகள் பின் வாங்குவதால் தொழிலாளர்களைச் சுதந்திர உலகச் சந்தையிலிருந்து தருவிக்கலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆகவே தமிழ்நாட்டிலிருந்தும் அதிகத் தொழிலாளர்கள் இங்கு வரத் தொடங்கினால் அதில் நிச்சயம் நல்ல படைப்பாளர்கள் இருப்பார்கள். (ஏற்கனவே இருக்கிறார்கள்.) ஆகவே சிங்கப்பூருக்கு ஏற்பட்டதே எங்களுக்கும் ஏற்படும். "மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்" என்ற எங்கள் அடையாளத்தின் நிர்ணயங்களை நாங்கள் மிகவும் விரிவு படுத்த வேண்டியிருக்கும். ஏற்கனவே அந்த அடையாளத்தை மலாய் மொழியில் எழுதும் தமிழ் எழுத்தாளர்களோடு நாங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலைமை வந்திருக்கிறது.


இப்படிச் சில தயக்க உணர்வுகளோடுதான் ஜெயந்தியின் படைப்புக்களை நான் படிக்க ஆரம்பித்தேன். னால் படித்து முடித்தபோது ஜெயந்தி போன்றோரின் வரவு இந்த சிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கியத்துக்கு மிகப் பெரிய ஆதாயமே தவிர அபாயம் இல்லை என்பது தெளிவாகிற்று.


சிங்கப்பூர் இனி எழப்போகும் புதிய தமிழ்ப் படைப்பிலக்கியத்துக்கு ஒரு சோதனைக் களம் என்று சொல்லலாம். தமிழ் படைப்பிலக்கியத்தின் ஜென்மபூமி கிராமமாக இருந்து வந்தது. தி.ஜா. போன்றவர்கள் அதனை அற்புதமாகப் பயன் படுத்தினார்கள். புதுமைப் பித்தன், கல்கி, ஜெயகாந்தன் (வகைக் கலப்புக்காக இந்த வரிசை) கியோர் சென்னை, மதுரை போன்ற நகர வாழ்க்கை பற்றி எழுதினாலும் அவை தமிழ்நாட்டு கிராமவாசம் மாறாத நகர்களேயாகும்.


ஆனால் உலகப் பொருளாதாரத்தில் கிராமத்தின் இடம் குறைந்து வருகிறது. இந்தியாவிலும் கூட விரைவில் நகரங்களில் வாழுவோர் எண்ணிக்கை கிராமங்களில் வாழுவோர் எண்ணிக்கையைத் தாண்டும்.


ஜெயந்தி வாழுகின்ற சிங்கப்பூரில் கிராமங்கள் கிடையாது. "ஏழைகள்" என்ற ஒரு வகுப்பினர் கிடையாது. இந்த இரண்டு விஷயங்களும் சேர்ந்து அங்கு தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் பின்புலப் பாரம்பரியத்தைப் புரட்டிப் போட்டுவிட்டன.
ஜெயந்தி இந்தப் புதிய சவால்களை மிகச் சாதுர்யமாக எதிர் கொண்டுள்ளார். அவரின் எழுத்துக்களில் நகர நெருக்கடிகளும் மன அழுத்தங்களும் செல்வச் செழிப்புக்கிடையில் வாழ்க்கை வக்கிரமாகிவிடுவதும் மிக யதார்த்தமாக வந்துள்ளன. இனி குவால லும்பூரிலும் சென்னையிலும் டெல்லியிலும் லண்டனிலும் தமிழர் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் எழுத்துக்கள் எப்படியிருக்கும் என்பதை இவரது கதைகளை வைத்தே யூகித்துவிடலாம் போலிருக்கிறது.


இவர் கதைகளைத் தொகுத்துள்ள வரிசை முறையில் அமைந்துள்ள முதல் இரண்டு கதைகளும் முதன்மை இடம் பெறுவது பொருத்தம். "நாலேகால் டாலர்" கதையில் பேரங்காடியில் ஒரு வாழ்த்து அட்டைக்கு பணம் செலுத்த மறந்து விட்ட கதைத் தலைவி அடைகின்ற அவமானமும் மன வேதனையும், "ஈரம்" கதையில் திடீரென நின்றுவிட்ட மின்தூக்கியில் பயத்தால் மூத்திரம் பெய்துவிட்ட தமிழ்நாட்டு வீட்டுப் பணிப் பெண்ணுக்கு ஏற்படும் அதே அனுபவங்களும் நகர வாழ்க்கையில் மட்டுமே நடக்கக் கூடியன. இந்த அப்பாவிப் பெண்கள் இழைத்துவிட்ட இந்தத் தவறுகளை இப்படிப் பெரிது படுத்த ஈரம் வற்றிவிட்ட நகர ஒழுங்கு முறை அமைப்புமுறையில்தான் முடியும்.


இனி தொடர்ந்து வருகின்ற கதைகளிலும் நகரம், நமக்குப் பழகிவிட்ட வாழ்க்கை முறைகளை, உறவுகளை எப்படியில்லாம் விகாரப் படுத்திவிட்டது என்பதைத்தான் அவ்வந்த வாழ்க்கை முறைகளின் யதார்த்தம் குலையாமல் ஜெயந்தி சொல்லுகிறார்.
"பந்தயக் குதிரை" கதையில் சிங்கப்பூரில் படிக்கும் குழந்தைகளின் மன நெருக்கடிகளும், அவற்றுக்கிடையில் தமிழ் படிக்கப் படும் வேதனைகளும் கூறப்படுகின்றன. இது செய்தி; யதார்த்தம். ஆனால் அந்த யதார்த்தத்தை நுண்ணிய கற்பனையோடு நயமாக அளிக்க முடிந்திருப்பதுதான் ஜெயந்தியின் வெற்றி.
பள்ளியில் பரிட்சை நடக்கும் நேரம். போகிற வழியில் விபத்தில் அகப்பட்டுக் கொண்ட புறாவை இந்த மாணவன் பார்க்கிறான். தேர்வு பொருளாதார வாழ்க்கையின் கட்டாயத் தேவை. ஆனால் புறாவின் நிலைமை மனிதநேயத்தோடு சேர்ந்து மனதை அலைக்கழிக்கிறது. இதனை ஒரு ஓட்டப் பந்தய வேகத்தில் அவர் சொல்லுகிறார்:
"தேர்வா, புறாவா? குதிரை. தேர்வு தான், தேர்வு தான், மனம் அலறியது. ஆனால் பாவம், அதற்கென்னவானதோ? அந்தச் சிறிய பறவை உயிர் பிழைத்ததா தெரியவில்லையே. 'புறாவா தேர்வா?' - உறுமியது குதிரை. தேர்வு தான், தேர்வு தான். 'சரி பின் என்ன யோசனை, சீக்கிரம் வீட்டுக் கதவைத் திறந்து படிக்க ஆரம்பியேன். இல்லையென்றால், பத்தயத்தில் தோல்விதான் உனக்கு,..ஆமாம், நினைவிருக்கட்டும்,..ம் ,..ஓடு, ம்'. மதிப்பெண்கள் ஓடு, ம், புள்ளிகள்,..ஓட்டம், ஓட்டம், ஓட்டம், முடிவற்ற ஓட்டம்..."


"நுடம்" கதையில் ஒரு குழந்தையின் மன அழுத்தமும் அதற்குத் தாயின் கவனிப்புத் தேவையாவதையும் அம்மாவை நொண்டியாக வரையும் குழந்தை மூலமான மனோதத்துவக் கதையாக ஆக்கியுள்ளார். "திரிசங்கு" கதையில் அப்பாவும் அம்மாவும் பிரிந்து வெவ்வேறு திருமணம் செய்து கொண்ட கதையின் சிக்கலான பின்னல்கள் ஒரு சிறுபிள்ளையின் வெகுளிப் பார்வையிலிருந்து அளிக்கப்படுகின்றன.
நகரச் சூழ்நிலையிலும், அங்கு வாழ்க்கை நடத்த வேண்டிய பொருளாதாரப் போட்டி மனப்பான்மையிலும் மன ஈரம் வற்றிப்போகும் நிலைமையைத்தான் ஜெயந்தியின் பெரும்பாலான கதைகள் சொல்லுகின்றன. பொருளாதாரக் குதிரை அடிபட்டு விழும் மனிதநேயப் புறாவை மிதித்துக் கொண்டு ஓடுகிறது.


ஆனால் ஜெயந்தி தரும் செய்தி இவற்றின் அடிநாதமாக இந்தச் சூழ்நிலையிலும் மனிதநேயம் வற்றிப் போய்விடக் கூடாது என்பதுதான். பொருளாதாரத்தின் இயந்திரப் பற்களிடையே மனதின் மென்மை சிக்குண்டு விடக்கூடாது என்னும் எச்சரிக்கைகள் தெளிவாக இருக்கின்றன.


ஜெயந்தியின் கதை சொல்லும் முறை மிகச் சரளமானது. சம்பவப் பின்னல்கள் கதையோட்டத்தின் தேவைக்கேற்ப சுருக்கமாகவும் நுணுக்கமாகவும் அமைகின்றன. அவருடைய கதைகள் திறமான நெசவுகள். படிக்கப் படிக்கப் பட்டுப் போல் மனதில் வழுக்கி ஓடுகின்றன.


தமிழ்ச் சிறுகதைகள் நகர மயம் ஆகுதலும் உலக மயம் ஆகுதலும் நிகழும்போது அழுத்தமாகச் சொல்லப்பட வேண்டிய செய்திகள் எவை என்பதற்கு ஜெயந்தியின் கதைகள் முன்னுதாரணங்களாக அமைந்திருக்கின்றன.


வாழ்த்துக்கள்.

30 July 2005