Tuesday, May 25, 2010

மனுஷி

- ஏ.பி. ராமன்





சிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் 'மனுஷி' சிறுகதைத் தொகுப்பு நூலைப்பற்றிய சிறு விமரிசனம் இது. இவர் சிங்கப்பூர் எழுத்தாளரா தமிழக எழுத்தாளரா என்பதை நிர்ணயிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லையென்றலும், சிங்கப்பூரில் குடியேறி 20 வருடங்களாக நிரந்தரமாக இங்கே வசித்துக் கொண்டிருக்கும் இவர் நம்மைப் பொறுத்தவரை சிங்கப்பூரர் தான். காரணம், சிங்கப்பூர் வாழ்க்கையை இந்த அளவுக்கு உவமித்து உணர்த்தும் தன்மையை மிகவும் நுட்பமான வார்த்தைகளால் கச்சிதமாகக் கையாண்டு வரும் இவரை உள்நாட்டு எழுத்தாளர்களின் முன் வரிசையில் தாராளமாக நிறுத்தலாம். முன்னர் வெளியான இவருடைய 'நாலேகால் டாலர்' மற்றும் 'பின் சீட்' தொகுப்புகளும் சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்காசிய்ட நாடுகளில் பெரிதும் பாராட்டப்பட்டதோடு இந்திய எழுத்துல ஜாம்பவான்களாலும் பேசப்பட்டன. பெரும்பாலான கதைகளில் சிங்கப்பூர் சூழலை அதிக அழுத்தத்துடன் விவரித்துள்ளார். அவை எழுதப்பட்ட நோக்கத்தையும் நிறைவேற்றி வைக்கின்றன. அந்த முயற்சிக்குத் தேவையான தைரியம் இந்நூலாசிரியருக்கு இருக்கவே செய்கிறது.

குறுகிய காலத்தில் 13 நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் சிறுகதைத் தொகுப்புகள் தவிர 'வாழ்ந்து பார்க்கலாம் வா', 'நெய்தல்' ஆகிய இரு நாவல்கள், 'முடிவிலும் ஒன்று தொடரலாம்' என்ற குறுநாவல் தொகுப்பு, 'ஏழாம் சுவை' என்ற கட்டுரைத் தொகுப்பு, சீனப்பெண்களின் வாழ்வையும் வரலாற்றையும் ஆய்வுப்பூர்வமாக எழுதியுள்ள 'பெருஞ்சுவருக்குப் பின்னே' என்ற நூல், சீனக்கவிதைகளின் மொழிபெயர்ப்பு+தொகுப்பு மற்றும் சில நூல்களும் இவருக்குப் புகழ் சேர்த்து வருகின்றன.

ஜெயந்தி சங்கரின் எழுத்துகளில் அனுபவத்தின் சாயல் அதிகம் தெரியும். எந்த உண்மையான எழுத்தாளனின் கற்பனைக்கும் அனுபவம் அவசியம் தேவையாகிறது. இலக்கிய எழுத்தாளனுக்கு அனுபவத்தின் அவசியம் புரியும். அனுபவத்திலும் அனுபவித்தலிலும் எத்தனையோ வகையுண்டு. ஒரு எழுத்தாளனுக்கு அனுபவமாகப் படுவது மற்றவனுக்கு சூன்யமாகப் படலாம். ஊர் உலகம் சுற்றும் எழுத்தாளனுக்கும் தன் சிருஷ்டிக்குத் தேவையான அனுபவத்தைப் பெற முடியாமற்போகலாம். ஆனால், அதை விடவும் அதிகமான ஆழமான, அதனினும் மாறுபட்ட ஒரு முழு அனுபவத்தை வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் ஓர் எழுத்தாளன் பெற்று விடலாம். அனுபவம் அவரவர் கண்ணோட்டத்தைப் பொறுத்தது தான். உலகம் சுற்றும் தமிழ் எழுத்தாளர்களில் பலரும் கூட தாம் வாழ்ந்த இடங்களையும் அவ்விடங்களின் வாழ்க்கை முறைகளையும் தம் எழுத்தில் பிரதிபலிக்க மறந்ததில்லை.

மறைந்த எழுத்தாளார் சுஜாதா சுற்றாத நாடில்லை. ஆனாலும், ஸ்ரீரங்கத்தையும் திருச்சியையும் தொட்டு எழுதுவதில் அவர் கடைசிவரை ஒரு தனித் துடிப்பு காட்டினார். திருநெல்வேலி வட்டாரத்தை இழுத்து வருவதில் புதுமைப்பித்தன், வல்லிக்கண்ணன், ஸ்ரீவேணுகோபாலன் போன்றோர் போட்டி போட்டனர். தி. ஜானகிராமனுக்கு தஞ்சாவூர்ப்பகுதி தொக்கு மாதிரி. மலேசிய சிங்கப்பூரில் பல ஆண்டுகள் வாழ்ந்த கு. அழகிரிசாமி தமிழ்நாட்டு இடைசெவல் மண்ணை ஆங்காங்கே தூவ மறக்காதவர். அந்தக் கால எழுத்து மேதையான க.ந.சுப்ரமணியம் ஐரோப்பிய நாடுகளுக்குப் போகும் போதும் சாத்தனூரையும் சர்வமான்ய அக்கிரகாரத்தையும் குறிப்பிடுவதில் தனி ஆர்வம் காட்டினார்.

ஆனால், இதெல்லாம் அந்தக்கால விஷயமாகிவிட்டது. இப்போது பலரும் தங்கள் அனுபவ வாழ்க்கையிலிருந்து எதையும் பெறவோ பெற முயலவோ இல்லை என்பது தான் உண்மை. அதற்குக் காரணம், இன்றைய எழுத்தாளர்களின் பெரும்பாலான படைப்புகளில் இலக்கிய நோக்கம் குறைவு என்பது தான்.

சிறுகதைகளில் அனுபவங்களுக்கு இலக்கிய உருவம் கொடுப்பதும் சுலபமல்ல தான். காரணம், அனுபவத்தின் பரப்பளவைவிட அதன் ஆழம் தான் எந்த இலக்கியத்திற்கும் இன்றியமையாததாகிறது.

இவற்றை இங்கு குறிப்பிடுவதற்கான காரணம் ஜெயந்தி சங்கரின் சிறுகதைகளில் பிறந்த நாடும் வாழும் நாடும் பசுமையாக ஆத்மார்த்தமான சித்தரிப்பு காண்கிறது. மதுரை, ஒரிஸா, அஸ்ஸாம் இவற்றுடன் சிங்கப்பூரின் செங்காங், பீஷான், தேக்கா பகுதிகள் சிரமமின்றிச் சேர்கின்றன. மனித உறவுதான் அந்த இணைப்பிற்கு அங்கே மேம்பாலமாக அமைகிறது. இந்தியக் கண்ணோட்டத்திலும் சரி, சிங்கப்பூர் கண்ணோட்டத்திலும் சரி இவருடைய கதைகளில் இவரின் அனுபவ இழைகள் சுகமாகவே பின்னப்பட்டுள்ளன.

"சிறுகதை வடிவம், மிகநுட்பமான உறவுச்சிக்கல், நுண்ணிய நிகழ்வுகள், நேர்த்தி, மனவோட்டங்கள், கதை சொல்லல், அழகியல் போன்ற அனுபவம் சார்ந்தவற்றில் கவனம் செலுத்தி இயங்குவது தவிர்க்க முடியாததாகிறது", என்கிறார் நூலாசிரியர் தன் முன்னுரையில். நூற்றுக்கு நூறு உண்மை.

நுட்பமான உறவுச்சிக்கலை, நுண்ணிய நிகழ்வுகளாக கணவன் மனைவி இருவரின் மனவோட்டங்களாக 'மனுஷி' என்ற தலைப்பில் எழுதியிருக்கும் ஜெயந்தி சங்கரின் கதை சொல்லல் பாணி படிப்பவர்களின் உணர்வுகளுக்கு ஒரு தாலாட்டு! சொற்களை அவர் தராசு கொண்டு நிறுத்து நிறுத்துப் போடும் பாங்கு அருமை. மீனா நம் மனத்தோடு ஒன்றித்து விடுகிறாள். நம்மைப் பொருத்தவரை இது சிங்கப்பூர் கதை. ஆனால், ஜிம்பாப்வேயில் நிகழ்ந்தாலும் இதே பாத்திரங்களும் மனவோட்டங்களும் மிக நன்றாகவே பொருந்தும்.

'திரை' - இது முற்றிலும் சிங்கப்பூர் பின்னணி! பெண் குழந்தை வேண்டித் தவமிருக்கும் ஓர் இளந்தாயின் புலம்பல், குமுறல், ஆத்திரம், வெறுப்பு என்று ஒரு நவரச நாயகியாகச் சித்தரிக்கப்படும் தாயின் மனவுணர்வுகளை, பிரசவ மருத்துவமனைச் சூழலை, எதைப் பெற்றால் என்ன என சமாதானம் செய்யும் பெரியவர்களைச் சாடும் பெண் மனதை, பிரசவித்த பெண் படும் அன்றாட அவஸ்தைகளை அனுபவ நயத்துடன் சொல்கிறார். முதல் நாள் தாய்ப்பால் குடிக்காத குழந்தை மறுநாள் குடிக்க ஆரம்பித்ததும் அந்தத் தாய்க்கு மட்டுமல்ல நமக்கும் உள்ளம் பூரிக்கிறது. திரை - ஒரு நேரான நடை பாதை. தடையில்லாமல் தடுமாறாமல் அவரால் மட்டுமில்லாமல் வாசகனாலும் நடக்க முடிகிறது.

சுகாதார சிங்கப்பூரில் 'சார்ஸ்' அரக்கன் நிகழ்த்திய லீலைகளில் உயிரிழந்த சிந்துவையும் மகன் பிரவீணையும் சுற்றிச் சுழன்றோடும் கதை 'சுவடு'. குறைவான நிகழ்வுகளை நிறைவாகச் சொல்லியிருக்கிறார்.

'சொல்லாத சொல்', 2006ல் நடைபெற்ற பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியில் முதல் தகுதி பெற்ற கதை.

'அவள்', 'சாயல்', 'பாலா' ஆகிய கதைகள் சிங்கப்பூர் தொடர்புகொண்டவை. 'பாலா'வில் சொன்னதைச் செய்யும் கையாளாக, எடுபிடியாகத் திரியும் அசட்டு பாலாவுக்கும் ஓர் அரிய அதிர்ஷ்டம் வருகிறது. சிங்கப்பூரிலிருந்து சொத்து சுகங்கள்! ஆனால், அந்த வெள்ளை உள்ளமோ அதைத் தூக்கியெறிந்து விட்டு வீட்டு வேலைகளை வழக்கம் போலத் தூக்கிச் சுமக்க ஓடுவது நெகிழ்வைத் தருகிறது.

'ஒரே கேள்வி', 'பொன்சாய்', 'நான்கிலக்கம்' ஆகிய கதைகள் முற்றிலும் சிங்கப்பூர் எண்ணையில் பொறித்துச் சுட்டெடுக்கப்பட்ட பலகாரங்கள்! சுவை சுமார் தான் என்றாலும், பள்ளிக்கூடக் கல்லூரி இளசுகளைச் சுற்றியோடும் நிகழ்ச்சிகளைக் கொண்டவை. 'நான்கிலக்கம்' கதையில் சீனப்பிரயோகம் சற்று மிகையாகத் திணிக்கப்பட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. உள்ளூர் வாசகர்களுக்கு இந்த 'சப்ஜெட்' சற்று அலுத்துப் போனது. தமிழக வாசகர்கள் இதை 'டைஜெஸ்ட்' பண்ண சிரமப்படுவர். சிங்கப்பூரில் பேசும் தமிழ் மாறி வரும் இந்நாளில் 10 ஆண்டுகளுக்கு முன்னான பேச்சுத் தமிழை வலிந்து புகுத்துவது போல் அமையக் கூடாது என்பது என் கருத்து.

நன்றாக வளரும் ஓர் எழுத்தாளரை வளர்ந்த எழுத்தாளராக மாற்றும் அரிய வாய்ப்பு வாசகர்களுக்கும் கிடைத்திருக்கிறது. ஜெயந்தி சங்கரின் 'மனுஷி' மதி நிலையத்தின் வெளியீடு. இங்கு, இது தவிர மற்ற தொகுப்புகளான 'திரைகடலோடி', 'பின் சீட்' மற்றும் 'நாலேகால் டாலர்' கிடைக்கும்.

நன்றி: முல்லைச்சரம்

No comments: